தலைகீழாகத் தெரியும் கோபுர நிழல்!
கர்நாடக மாநிலம், பெல்லாரி மாவட்டத்தில் ஹம்பி என்னுமிடத்தில் துங்கபத்ரா நதிக்கரையில் அமைந்துள்ளது விருபாட்சர் கோயில். உலகப் புகழ் பெற்ற இக்கோயில் ஏழாம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசால் கட்டப்பட்டது. இந்தக் கோயிலின் ராஜகோபுரம் சுமார் 165 அடி உயரம் கொண்டது. இதன் நிழல் ஒரு சுவற்றில் இங்கு தலைகீழாக விழுகிறது. இந்த அதிசய நிழலின் ரகசியம் இன்று வரை புரியாத புதிராகவே உள்ளது. நிழலானது தலைகீழாக விழவேண்டுமானால் நிஜத்துக்கும் நிழலுக்கும் இடையில் கண்ணாடி போன்று ஏதாவது ஒன்று நிச்சயம் தேவைப்படும். ஆனால், இங்கு அப்படி எதுவுமே இல்லாமல் இந்த கோயிலின் நிழல் எப்படித் தலைகீழாக விழுகிறது என்பதை யாராலும் கண்டறிய முடியவில்லை.
இந்தக் கோயிலில் உள்ள மண்டபம் ஒன்றில் 114 தூண்கள் உள்ளன. மற்றொரு மண்டபத்தின் நடுவில் ஒரு வடிகால் கால்வாய் அமைக்கப்பட்டு அதில் துங்கபத்ரா ஆற்றின் நீர் மடைப்பள்ளியை அடைந்து பின் வெளிப்பிராகாரம் வழியாக வெளியேறுகிறது. வடிகால் கால்வாய் முதல் வானளாவிய கோபுரம் வரை அனைத்திலும் மிகச் சிறந்த கட்டடக் கலையின் திறன் காண்போரை பிரமிக்க வைக்கிறது. விஞ்ஞானிகள், "கோபுரத்துக்கும் சுவருக்கும் இடையே ஒரு துளை லென்ஸ் போலச் செயல்பட்டு கோபுரத்தின் நிழலை தலைகீழாக விழச் செய்கிறது என்று கூறுகின்றனர். இருந்தாலும் அவை நிரூபிக்கப் படவில்லை என்றே கூறப்படுகிறது. இந்தக் கோயிலில் உள்ள கல்வெட்டுகளை ஆராய்ச்சி செய்ததில் இதை சாளுக்யா மற்றும் ஹொய்சலா வம்சத்தினர் கட்டியதாகத் தெரிகிறது. ஆனாலும், கிருஷ்ணதேவராயர் காலத்திலும் இந்தக் கோயிலில் பல திருப்பணிகள் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் இருக்கிறது.