உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாச்சியார்கோவில் பங்குனி தேர்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!

நாச்சியார்கோவில் பங்குனி தேர்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!

கும்பகோணம்: நாச்சியார்கோவில் சீனிவாசபெருமாள்கோவிலில் நேற்று கொடியேற்றத்துடன் பங்குனிதேர்திருவிழா தொடங்கியது. ஏப்ரல் 1ம் தேதி உலகபிரசித்திபெற்ற கல்கருட சேவை நடக்கிறது. கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில் வஞ்சுளவல்லி தாயார் உடனாய சீனிவாசபெருமாள்கோவில் உள்ளது. புகழ்பெற்ற 108 வைணவத்தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு மூலவர், உற்சவராக கல்கருடபகவான் அருள்பாலிக்கிறார். இங்கு ஆண்டுதோறும் பங்குனித்தேர்திருவிழா அதிவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இவ்வாண்டும் நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலை பெருமாள், தாயார் சிறப்பு புஷ்பலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். முன்னதாக கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடந்த பின் காலை 9.30 மணிக்கு கொடியேற்றம் கோலாகலமாக நடந்தது. நிர்வாக அதிகாரி பொன்னழகு மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். விழா நாட்களில் தினசரி காலை பல்லக்கிலும், மாலை பல்வேறு வாகனங்களில் பெருமாள், தாயார் வீதியுலா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஏப்ரல் 1ம் தேதி மாலை 7 மணிக்கு உலகப்பிரசித்திபெற்ற கல்கருடசேவை நிகழ்ச்சி நடக்கிறது. ஆண்டுக்கு இரண்டு முறை மட்டும் நடைபெறும் இந்நிகழ்ச்சியின் போது மூலவராக விளங்கும் கல்கருட பகவான் சன்னதியிலிருந்து முதலில் நான்கு பேர் பின் 8, 16, 32, 64 பேர் என படிப்படியாக அதிகரித்து வாகன மண்டபம் எழுந்தருளும் நிகழ்ச்சி மக்கள் வெள்ளத்தில் கருடபகவான் நீந்தி வருவது கண்கொள்ளாக் காட்சி. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். விழாவின் ஒன்பதாம் நாள் விழாவான தேரோட்டம் வரும் 6ம் தேதி காலை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி பொன்னழகு மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !