நான்குநேரி பெருமாள் கோயிலில் தங்க தேரோட்டம் கோலாகலம்!
ADDED :5130 days ago
நான்குநேரி : நான்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் தங்க தேரோட்டம் நேற்று நடந்தது. நான்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் தங்க தேரோட்டமும், சித்திரை மாதம் பெரியமரத் தேரோட்டமும் நடப்பது வழக்கம். இவ்வாண்டு பங்குனி தங்க தேரோட்ட திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் பெருமாள் இரவு ஒவ்வொரு வாகனத்தில் வீதிஉலா சென்றார். 5ம் நாளன்று பெருமாள் கருட வாகனத்திலும், 7ம் திருநாளன்று தங்க சப்பரத்திலும் வீதிஉலா சென்றார். 10ம் திருநாள் தங்க தேரோட்டம் நடந்தது. தங்க தேரோட்டத்தை நான்குநேரி ஜீயர் சுவாமிகள் வடம்பிடித்து துவக்கி வைத்தார். தேர் 4 ரதவீதிகளையும் சுற்றி வந்தது. தேரோட்ட திருவிழாவில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வகத்தினர் செய்திருந்தனர்.