திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் சூரசம்ஹாரம்
திருப்பரங்குன்றம், சுப்பிரமணியசுவாமி கோயிலில் இன்று நடக்கும் சூரசம்ஹாரலீலைக்காக கோவர்த்தனாம்பிகை அம்பாளிடம் சுவாமி வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. கோயில் கம்பத்தடி மண்டபத்தில் கோயில் பணியாளர்கள் திருக்கண்ணில் நேற்று மாலை சத்தியகிரீஸ்வரர், தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளினார். மூலவர்களுக்கு பூஜை முடிந்து கோவர்த்தனாம்பிகை அம்பாளிடம் இருந்த நவரத்தின வேல் சகல விருதுகளுடன் பெறப்பட்டு நந்தியை வலம் வந்து சுப்பிரமணிய சுவாமி கரத்தில் சேர்ப்பிக்கப்பட்டது.
சூரசம்ஹாரம்: இன்று மாலை 6:00 முதல் 6:30 மணிக்குள் சன்னதி தெரு சொக்கநாதர் கோயில் முன் சூரபத்மனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடக்கும். 6 நாட்களாக சஷ்டி விரதம் மேற்கொண்டுள்ள பக்தர்கள் நாளை விரதத்தை முடித்துக் கொள்வர். அதற்கு முன் இன்று மாவு விரதம் மேற்கொள்வர். இதற்காக பக்தர்கள் பச்சரியில் மாவு இடித்து, அதில் வெல்லம், சுக்கு, ஏலக்காய் சேர்ந்து மாவு தயார் செய்தனர்.