விமர்சனங்களுக்கு அஞ்சாதீர்கள்!
ஒரு வீட்டில் இருந்த தாத்தா, தன் பேரன்களை ஒழுங்காகப் படிக்கச் சொல்லி நச்சரித்துக் கொண்டே இருப்பார். இதனால் தாத்தாவை அவர்களுக்கு பிடிக்காது. அந்த பேரன்கள் ஒரு கிளி வளர்த்தனர். அந்த கிளிக்கு தங்கள் தாத்தாவை கேலி செய்ய கற்றுக் கொடுத்தனர்.கிளியும் சிறுவர்கள் சொன்னபடி, ''தாத்தாவே செத்துப் போ, தாத்தாவே செத்துப்போ,'' என திரும்பத்திரும்பச் சொல்லும். தாத்தாவுக்கு ஏக வருத்தம். ஒருநாள் அவர் ஒரு பாதிரியார் வீட்டுக்குப் போனார். அங்கேயும் ஒரு கிளி இருந்தது. அது அங்கு நடக்கும் பிரார்த்தனையைக் கேட்டு, 'ஆமென்.. ஆமென்' என்றது.இந்தக் கிளியுடன் நம் வீட்டுக்கிளியும் இருந்தால் அதற்கு நல்ல புத்தி வருமென நினைத்து மறுநாள் பாதிரியார் வீட்டு கிளியின் பக்கத்தில் தன் கிளியை விட்டார் தாத்தா.ஆனால், அதற்கு புத்தி மாறுமா?'தாத்தாவே செத்துப் போ' என சிறுவர்கள் வீட்டு கிளி சொல்ல, 'ஆமென்...ஆமென்' (அப்படியே ஆகட்டும்) என்றது பாதிரியார் வீட்டுக்கிளி.கிளி தன்னைக் கேலி செய்கிறதே என்பதற்காக, அதைத் திருத்த நினைத்த தாத்தாவிற்கு எந்த பயனும் கிடைக்கவில்லை.பைபிளில், 'முன்நிலையிலும் அவன் பின்நிலைமை அதிகக்கேடுள்ளதாக இருக்கும்'' என்று ஒரு வசனம் வருகிறது.இந்த வசனத்தின் மூலம், விமர்சகர்கள் எக்காலத்தும் திருந்த மாட்டார்கள் என்பது நிதர்சனமாக தெரிகிறது. அவர்களைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவதே நல்லது.