உள்ளூர் செய்திகள்

உயிர் மேல் ஆசையா! "இந்த ஆசையை விடுங்க

பணம்... பணம்... பணம்... இதை விட்டால், இந்த பூமியில் வேறு சொல்லே காதில் கேட்கவில்லை.ஒரு பெண் தன் கணவர் தன்னிடம் கொண்டு வந்து கொடுத்த பணத்தை கஷ்டப்பட்டு சேமித்தாள். ஒரு வங்கியில் இரட்டிப்பாகும் வகையில் போட்டு வைக்க கணவர் அறிவுறுத்தினார். அப்போது அவளது தோழி அவளைச் சந்தித்தாள். ''இதை வங்கியில் போட்டால், இரட்டிப்பாக எட்டாண்டுகள் காத்திருக்க வேண்டுமே! என்னிடம் கொடு. மூன்றே ஆண்டில் இரட்டிப்பாக்கித் தருகிறேன்,''எனச் சொல்லி, மூன்று மாதங்கள் வரை மாதம் பத்து சதவீத வட்டி கொடுத்தாள். இவளுக்கோ ஆசை அதிகமானது. தன் கணவருக்குத் தெரியாமல், தன் நகைகளை விற்று அந்தப் பணத்தையும் தோழியிடம் கொடுத்தாள். அடுத்த மூன்று மாதமும் வட்டி வந்தது. மறுமாதம் வட்டி வரும் தேதியில் தோழியைக் காணவில்லை. வீட்டில் போய் பார்த்தால் கதவு மூடியிருந்தது. விசாரித்ததில் அவள் குடும்பத்துடன் இதே போல பலரிடமும் பணம் பெற்றுக் கொண்டு ஊரைக் காலி செய்து விட்டு ஓடியது தெரிய வந்தது. இவள் நொறுங்கிப் போய் தற்கொலை செய்து கொண்டாள்.'பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது' என்ற பைபிள் வசனத்தை படித்திருந்தாலும் அதை ஒதுக்கிவிட்டு தன் இஷ்டத்துக்கு நடந்ததால், அவளுக்கு இந்தக் கதி ஏற்பட்டது. பணம் வாழ்வுக்கு தேவை. ஆனால் அதன் மீதான ஆசை அதிகரித்து விட்டால் உயிரையே பறித்து விடும்... கவனம்!