மகாபாரத மாந்தர்கள் - 7
சூரியனாகிய நான்...“சிவனை முக்கிய தெய்வமாக கொண்ட சைவம், திருமாலை முக்கிய தெய்வமாக கொண்ட வைணவம் இருப்பதைப் போல என்னை முக்கிய தெய்வமாகக் கொண்டு வழிபடும் சவுரம் என்ற பிரிவு வட இந்தியாவிலும், நேபாளத்திலும் உண்டு.சூரியக் குடும்பத்தின் தலைவனான என்னைக் குறித்தும் என் மனைவி சஞ்சனாவைக் குறித்தும் மகாபாரதம் கூறுகிறது. என் மனைவி சஞ்சனாவை மிக நேசித்தேன். ஆனால் என் வெப்பத்தை அவளால் பொறுக்க முடியவில்லை. எனவே அவளைப் போலவே இருந்த சாயா என்ற பெண்ணை அவளாக நடிக்க வைத்துவிட்டு சஞ்சனா தலைமறைவாக வாழத் தொடங்கினாள். சஞ்சனா மூலம் எனக்கு எமன், மனு, எமி ஆகிய குழந்தைகள் பிறந்தனர். இவர்களும் சாயாவைத் தங்கள் தாய் சஞ்சனா என்றே எண்ணி வாழ்ந்தனர். ஆனால் ஒரு கட்டத்தில் தங்கள் தாயார் சனியை மட்டுமே பாசமுடன் நடத்துவதை அறிந்து என்னிடம் புகார் கூறினார்கள். (சஞ்சனா என எண்ணி வாழ்க்கை நடத்திய சாயா மூலமாக எனக்கு பிறந்தவன்தான் சனி).எனக்கு சாயாவின் மீது சந்தேகம் வந்து அவளை விசாரித்து உண்மையை அறிந்து கொண்டேன். பின்னர் பூமிக்குச் சென்று சஞ்சனாவை அணுகிய போது அவள் அப்போதும் என்னை நெருங்க அச்சப்பட்டாள். உலகின் தலைசிறந்த கட்டடக்கலை நிபுணரான எனது மாமனார் விஸ்வகர்மா எனக்கு உதவினார். எனது அதிக வெப்பக் கரங்களை அவர் குறைத்தார். அதன் பின் சஞ்சனா என்னுடன் வாழத் தொடங்கினாள்.மகாபாரதத்திற்கும். எனக்கும் பலவிதங்களில் தொடர்புண்டு. அவற்றில் குறிப்பாக மூன்று கட்டங்களைக் கூறலாம்.குந்தியின் இளம் பருவத்தில் துார்வாச முனிவர் அவளது தந்தையின் அரண்மனையில் வந்து தங்கினார். அப்போது சிறுமியும் இளவரசியுமாகிய குந்தி அவருக்கு வேண்டிய பணிவிடைகளை குறிப்பறிந்து செய்து வந்தாள். அந்த சேவையில் மகிழ்ந்து குந்திக்கு வரம் ஒன்றை அளித்தார் துார்வாசர். அது வித்தியாசமான ஒரு வரம். எதிர்காலத்தில் தன் கணவன் பாண்டுவின் மூலம் அவளுக்குக் குழந்தை பிறக்காது என்பதை அறிந்து அதன் காரணமாகவும் இந்த வரத்தை அவர் அளித்து இருக்கக்கூடும். தன் விருப்பப்படி எந்த கடவுளையும் அழைத்து அவர் மூலம் அவள் குழந்தை பெற முடியும் - இதுதான் அந்த வரம்.துார்வாசர் அரண்மனையை விட்டு நீங்கிய உடனேயே விளையாட்டுத்தனம் நீங்காத குந்தி வரத்தின் சக்தியைச் சோதிக்க முடிவெடுத்தாள். என்னைத் துதித்தபடி அந்த மந்திரத்தை உச்சரித்தாள். நான் அவள் முன் தோன்றினேன். ஓர் அழகிய மகனை அவளுக்கு அளித்தேன். அவன்தான் கர்ணன்.என் மகன் கர்ணன் நாளடைவில் கவுரவர்களுடன் சேர்ந்தான். என்றாலும் தர்ம நியாயப்படி நடந்து கொண்ட பாண்டவர்களுக்கும் என் ஆதரவை அளித்தேன். சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள் வனவாசம் சென்றனர். அப்போது ஆன்றோரும் முனிவர்களும் பாண்டவர்களின் குடிலுக்கு விஜயம் செய்வது வழக்கமானது. அவர்களுக்கெல்லாம் உணவளிக்க பாண்டவர்களிடம் போதிய செல்வம் இல்லை. திரவுபதி என்னை பிரார்த்தித்தாள். நான் அவளுக்கு அட்சய பாத்திரம் ஒன்றை அளித்தேன். 'இந்தப் பாத்திரத்தில் உணவு சமைத்தால் எடுக்க எடுக்க உணவு வந்து கொண்டே இருக்கும்' என்றேன். இதைக் கொண்டு தினமும் திரவுபதி சமைத்து பாண்டவர்களுக்கும் விருந்தினர்களுக்கும் உணவளித்து தானும் உண்டு பசியாறியபின் பாத்திரத்தைக் கவிழ்த்து வைப்பாள். அப்படி வைத்தபின் அன்று அந்தப் பாத்திரத்தில் உணவு தோன்றாது.தீய எண்ணம் கொண்ட துரியோதனன் துார்வாசரை அழைத்து பாண்டவர்களின் குடிலுக்குச் சென்று அங்கு விருந்து சாப்பிட வேண்டும் என்று கூறினான். நான் அவர்களுக்கு அளித்த அட்சய பாத்திரம் பற்றி அவனுக்குத் தெரியாது. உணவளிக்க முடியாத பாண்டவர்களை துார்வாசர் சாபத்துக்கு உள்ளாக்குவார் என்பது அவனது கணிப்பு.அவரும் தர்மரிடம் சென்று 'நானும் என் சீடர்களும் நதியில் குளித்துவிட்டு வந்து உங்கள் குடிலில் உணவு உண்கிறோம்' என்று கூறிவிட்டுக் கிளம்பினார். பாண்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால் அன்று பாண்டவர்கள் உணவருந்தி விட்டு நான் அளித்த அட்சய பாத்திரத்தை கவிழ்த்து வைத்து விட்டிருந்தனர்!பசியோடு வரும் துார்வாசருக்கு உணவு அளிக்காவிட்டால் சாபம் அளித்து விடுவாரே, என்ன செய்வது? இந்த நிலையில் கண்ணனை வேண்டினாள் திரவுபதி. அந்த அட்சய பாத்திரத்தை கண்ணன் எடுத்துப் பார்க்க அதற்குள் ஒரே ஒரு சிறு கீரை ஒட்டிக்கொண்டிருந்தது. அதை அவன் எடுத்து உண்ண, உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் உணவு சாப்பிட்ட திருப்தி ஏற்பட்டது. துார்வாசரும் அவர் சீடர்களும் நிறைந்த மனதோடும் நிறைந்த வயிறோடும் வந்த வழியே கிளம்பிச் சென்று விட்டனர்.மகாபாரத போரில் பாண்டவர்களுக்கு உதவவும் என்னைக் கண்ணன் பயன்படுத்திக் கொண்டதுண்டு. அர்ஜுனனின் மகனான இளைஞன் அபிமன்யுவை வஞ்சகமாக சக்கர வியூகத்தில் சிக்கி இறக்க வைத்தான் ஜெயத்ரதன். இவன் சிந்து நாட்டின் மன்னன். கவுரவர்களின் ஒரே சகோதரியான துஷ்சலையின் கணவனும் கூட. தன் மகனை இழந்த அர்ஜுனன் 'நாளை பொழுது சாய்வதற்குள் நான் ஜெயத்ரதனைக் கொல்வேன். அப்படிக் கொல்லவில்லை என்றால் நானே தீயில் மடிவேன்' என்று சபதம் செய்தான். மறுநாள் நான் மறையும் வரை அர்ஜுனன் கண்களில் சிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக கவுரவர் சேனை ஜெயத்ரதனை மறைத்து வைத்தது. ஆனால் கண்ணபிரான் என்னிடம் ஒரு ஏற்பாட்டை செய்து கொண்டார். தன்னுடைய சுதர்சன சக்கரத்தால் என்னை மறைத்தார். இருள் சூழ்ந்தது. பொழுது சாய்ந்து விட்டதாக எண்ணிய ஜெயத்ரதன், தீயில் அர்ஜுனன் இறங்குவதை நேரடியாக காண வேண்டும் என்று ஆசைப்பட்டு வெளிப்பட்டான். கண்ணன் சட்டென தன் சக்கரத்தை விலக்க நான் ஒளியுடன் வெளிப்பட்டேன். அர்ஜுனன் ஜெயத்ரதனைக் கொன்றான்.இப்படி மகாபாரதத்தின் நிகழ்வுகளைப் பகல் பொழுதுகளில் கண்டதோடு அதன் சில முக்கிய திருப்புமுனைகளுக்கும் நான் காரணகர்த்தாவாக விளங்கினேன்''.- தொடரும்குஜராத்தில் உள்ள மோதேரா என்ற இடத்தில் காணப்படுகிறது கலைநயம் மிக்க சூரியக்கோயில். அகமதாபாதிலிருந்து 106 கி.மீ., தொலைவில் உள்ள இக்கோயில் பதினோராம் நுாற்றாண்டில் சாளுக்கிய வம்சத்தைச் சேர்ந்த முதலாம் பீமனால் கட்டப்பட்டது. கோயிலின் வெளியே காணப்படும் ராமகுண்ட குளம் மனதை மயக்குகிறது. பெரிய, ஆழமான குளம். இதில் மக்கள் இறங்கி நீராட வசதியாக நுாற்றுக்கணக்கான படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. அழகிய சிற்ப வேலைபாடுகளுடன் கூடிய சபா மண்டபத்தில் 52 துாண்கள் உள்ளன. இவை ஆண்டின் 52 வாரங்களைக் குறிக்கின்றன. இத்துாண்களில் மகாபாரதம், கிருஷ்ண லீலைகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.கருவறையில் சூரியன் தேரில் அமர்ந்து குதிரைகளை ஓட்டும் நிலையில் காணப்படுகிறார். முழுவதும் தங்கத்தால் ஆன இச்சிலையில் ஒரு பகுதியை கஜினி முகமது என்ற முகலாய மன்னன் உடைத்து எடுத்துச் சென்றான். கருவறையின் வெளிப்புறச் சுவர்களில் சூரியனின் 12 நிலைகளை எடுத்துக் காட்டும் சிற்பங்கள் காணப்படுகின்றன. மோதேரா சூரியன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மூன்றாம் வாரத்தில் நாட்டியாஞ்சலி விழா நடக்கிறது. இக்கோயிலை தவிர தமிழ்நாட்டில் சூரியனார் கோவில், ஒடிசாவில் கொனாரக், வடகிழக்கு இந்தியாவில் சூரிய பஹார், மத்தியப் பிரதேசத்தில் உனாஓ சூரியக்கோயில்கள் குறிப்பிடத்தக்கவை. காஷ்மீரில் ஸ்ரீநகருக்கு அருகே உள்ள மார்தானா என்னும் இடத்தில் சூரியக்கோயில் இருந்ததற்கான அடையாளத்தை காண முடிகிறது. ஜி.எஸ்.எஸ்.