உள்ளூர் செய்திகள்

"வள்ளல் ஆக்கிய வள்ளலார்!

செல்வந்தர் தேவநாயகம், வள்ளலார் ராமலிங்க சுவாமியிடம் ,''ஐயா! உங்களால் இரும்பைப் பொன்னாக்கித் தர முடியுமா?'' என்று கேட்டார். தங்கத்தின் மீது அவர் கொண்ட ஆசை, அறியாமையை கண்ட வள்ளலார் மனதிற்குள் சிரித்துக் கொண்டார். இருந்தாலும், செப்பு, இரும்புத் தகடுகளை வரவழைத்து, தம் சக்தியால் தங்கமாக்கி கொடுத்தார். அவை பத்தரை மாற்றுத் தங்கமாய் இருப்பதைக் கண்ட செல்வந்தர் மகிழ்ந்தார். தம் வீட்டில் இருக்கும் இரும்புக்கட்டிகளை எல்லாம் தங்கமாக்கித் தரும்படி கேட்டுக் கொண்டார்.மறுநாள் தேவநாயகத்தை அழைத்துக் கொண்டு வள்ளலார் சென்னிமலைக்குப் புறப்பட்டார். ''மலை மீது குடியிருக்கும் முருகப்பெருமானைத் தரிசித்துவிட்டு, வரும்வழியில் மூலிகைகளைப் பறித்து வருவோம்'' என்றார்.காலையில் மலை மீதேறிய தேவநாயகம், உச்சி வேளையில் பசி, தாகத்தால் சோர்ந்து விட்டார். சாப்பிட ஏதும் கிடைக்கவில்லை. ''ஐயா! பசி உயிர் போகிறது. வாருங்கள்! கீழே போய் விடுவோம்,'' என்று வள்ளலாரை அவசரப்படுத்தினார். ''இரும்பை பொன்னாக்க வேண்டாமா?'' என்று கேட்ட வள்ளலார் மூலிகை தேடுவதிலேயே ஆர்வம் காட்டினார். தேவநாயகத்திற்கு ஒரு அடி கூட எடுத்து வைக்க இயலவில்லை. ''ஐயா! எனக்கு பொன்னும் வேண்டாம்! பொருளும் வேண்டாம்! கொஞ்சம் தண்ணீரும், உணவும் இருந்தால் போதும்!'' என்று வேண்டிக் கொண்டார்.''கொஞ்சம் பொறுத்துக் கொள்ளக் கூடாதா! இரும்பை பொன்னாக்கினால், இன்னும் பணக்காரனாகி விடலாம் அல்லவா?'' என்றார் வள்ளலார்.''என்னை மன்னித்து விடுங்கள்! எனக்கு புத்தி வந்து விட்டது.'' என்ற தேவநாயகம் வள்ளலாரை வணங்கினார்.தன் சக்தியால் ஒரு தட்டு நிறைய பழம், தண்ணீர் ஆகியவற்றை வள்ளலார் வரவழைத்ததும், அவற்றை மகிழ்ச்சியுடன் சாப்பிட்ட அவர், ''இப்போது தான் உயிர் வந்தது போல இருக்கிறது'' என்று வணங்கினார்.''பசியின் கொடுமை எப்படிப்பட்டது என்பதை தெரிந்து கொள். ஒரு நாள் பசியையே பொறுக்க முடியவில்லையே. ஏழைகள் பட்டினியால் எப்படி துடிக்கிறார்கள்? அவர்களின் துன்பம் நீங்க ஏதாவது செய்ய வேண்டாமா?'' என்று கேட்டார்.தேவநாயகம், தன் சொத்து முழுவதையும் வள்ளலாரிடம் வழங்கி, ஏழைகளின் பசி போக்க வேண்டினார். அவரது சீடராக மாறினார்.