ஆராய்ச்சி செய்பவன் ஆன்மிகவாதியல்ல!
* யாரொருவர் இறைவனை அடையவேண்டும் என்று எப்போதும் ஏங்குகிறாரோ அவரின் மீதே இறைவனின் கருணை விழத் தொடங்கும்.* அன்பினால் வசப்படுத்தினால் ஆண்டவன் அகப்பட்டு விடுவான் என்பதை அருளாளர்களின் வரலாறு நமக்கு உணர்த்துகிறது.* ஆன்மிகப்பயிற்சி பழகப்பழக இறைவனின் அருளை நாம் உணரலாம். இறுதியில் இறைவனைத் தரிசிக்கும்பேறு உண்டாகும்.* இறைவனை எப்போதும் தன் இதயகமலத்தில் தாங்கிக் கொண்டு வாழ்பவனே பக்தன்.* அவதார புருஷர்களை நினைப்பதும் ஆண்டவனை நினைப்பதும் ஒரே பலனைத் தரும்.* வாழ்வில் எத்தனை இடையூறு, ஆபத்து நேர்ந்தாலும் ஞானி ஒருபோதும் கவலை கொள்வதில்லை.* இறைவனை அறிந்த ஞானி உலகப் பொருள்களின் மீது பற்று வைப்பதில்லை. * பக்தனுக்கு இறைநாமத்தின் மீது அதீத நம்பிக்கை இருக்கவேண்டும். இறைவனும் இறைநாமமும் வேறு வேறல்ல.* இறைவனே இந்த உலகமாக இருக்கிறான் என்ற நம்பிக்கை ஏற்பட்டால் நம்முடைய சிக்கல் அனைத்தும் ஒழிந்துவிடும். * மனதில் தீய சிந்தனைகள் இருக்கும் வரையில் உண்மையான பக்தி உண்டாவதில்லை.* ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பவன் ஆண்டவனை அறியமுடியாது. ஆன்மிகம் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது.* கண்ணில் கண்ட பெண்களை எல்லாம் தாயாக வணங்கிப் போற்றுபவனே உண்மைத்துறவி.* இறைவன் நமக்கு அருகில் இருக்கிறான். ஆனால், நாம் தான் அவரை உணர முற்படுவதில்லை.* உலகின் முதலாளியாக ஆண்டவன் இருக்கிறான். அவனுக்கு தொழிலாளியாக இருந்து பணிவிடை செய்வது தான் நம் வேலை. இதுதான் நாம் பிறந்த நோக்கமே.* சித்துகள் புரியும் மனிதர்கள் இருக்கும் இடத்திற்குப் போகாதீர்கள். அவர்கள் பாதை தவறியவர்கள்.* பொன்னாசை, பெண்ணாசை, மண்ணாசை மனதில் தங்கியிருந்தால் ஆன்மிகயோகம் கைகூடாது.* விவேகமும், வைராக்கியமும் ஆன்மிக வளர்ச்சிக்கான அடிப்படைப் பண்புகள்.* குடும்பவாழ்வில் ஈடுபட்டுக் கொண்டே இறைவனை சிந்திப்பவனே வீரபக்தன்.* அகங்காரத்தை அடியோடு வேரறுத்து விடுங்கள். இறைவனைக் காணும் பேறு பெறுவீர்கள்.* இறைவனே நமக்கு மிகவும் வேண்டியவர். அவர் நமக்கு அன்னியமானவர் அல்ல.* இறைவனின் பூரணகருணை இல்லாவிட்டால் மனிதன் அறியாமையை வெற்றி கொள்ள முடியாது.* தியாகம் செய்ய வேண்டுமானால் உலக ஆசைகளைத் தூக்கி எறியும் மனவலிமை வேண்டும்.* இறைகாட்சி பெற்ற ஞானிக்கு காமம், கோபம் போன்ற தீயகுணங்கள் அற்றுப்போய்விடும்.* உருவற்ற இறைவனை தியானிப்பது கடினம். அதனால் தான் கடவுளை உருவ வடிவில் வழிபடுகிறோம்.* இறைவனிடம் பக்தி உண்டாகவேண்டும் என்று எப்போதும் பிரார்த்தனை செய்யுங்கள்.அடித்துச்சொல்கிறார் ராமகிருஷ்ணர்