குங்குமக்காளி
சிவன், பார்வதியும் போட்டி நடனமிட்ட இடம் கடலுார் மாவட்டம் சிதம்பரம். இவளை தில்லைக்காளி என அழைக்கின்றனர். இவள் குங்கும அர்ச்சனை செய்பவர்களின் குறைகளைத் தீர்க்கிறாள்.ஒருமுறை சிவன், பார்வதி இடையே யார் சக்தி மிக்கவர் என வாக்குவாதம் ஏற்பட்டது. 'நானே உயர்ந்தவள்' என வாதிட்டாள் பார்வதி. 'சரி... நீயே உயர்ந்தவள்' என சொல்லிய சிவன் அவளை உக்கிர காளியாக மாற்றி திருவிளையாடலை ஆரம்பித்தார். அதற்காக வருந்திய அவள் சிவனிடம் விமோசனம் கேட்டாள். ''வருந்தாதே. உலக நன்மைக்காக அரக்கர்களை வதம் செய். பின்னர் சிதம்பரத்தில் தங்கி தவமிரு. நடராஜர் எனப் பெயர் தாங்கி அங்கு நான் வரும் போது என்னை அடைவாய்''என்றார் சிவன். அவளே 'தில்லைக்காளி' என்னும் பெயரில் இங்கு இருக்கிறாள். பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் இங்கு சிவனுக்கும், காளிக்கும் நடனப்போட்டி நடந்தது. 'ஊர்த்துவ தாண்டவர்' என்ற பெயரில் ஒரு காலைத் துாக்கி சிவன் நடனம் ஆட, காலைத் துாக்க முடியாமல் காளி தோற்றாள். சிவனின் ஏற்பாட்டின்படி அவளை சாந்தப்படுத்த புகழ்ந்து பாடினார் பிரம்மா. அவளும் சாந்தமாகி 'பிரம்ம சாமுண்டீஸ்வரி' என்ற பெயரில் நான்கு முகம் கொண்டவளாக மாறினாள். இவளுக்கு இங்கு சன்னதி உள்ளது. காளிக்கு நல்லெண்ணெய் அபிஷேகம், வெள்ளை வஸ்திரம், குங்கும அர்ச்சனை செய்ய கேட்ட வரம் கிடைக்கும். ஞாயிறன்று ராகுகாலம், பவுர்ணமி, அமாவாசை அன்று சிறப்பு பூஜை நடக்கிறது. மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இவளை தரிசிக்க நன்மை அதிகரிக்கும். பெண் வடிவில் தட்சிணாமூர்த்தி இங்கு இருக்கிறார். அவரை 'கடம்பவன தக்ஷிணரூபிணி' என அழைக்கின்றனர். எப்படி செல்வது: சிதம்பரத்தில் இருந்து கடலுார் செல்லும் வழியில் 1 கி.மீ.,விசேஷ நாள்: ஆடிவெள்ளி, ஆடி அமாவாசை, நவராத்திரி, மகாசிவராத்திரி.நேரம்: காலை 6:30 - 12:00 மணி; மாலை 4:30 - 8:30 மணி தொடர்புக்கு: 04144 - 230 251அருகிலுள்ள கோயில்: சிதம்பரம் நடராஜர் 1 கி.மீ., (மகிழ்ச்சியான வாழ்வுக்கு...)நேரம்: காலை 6:00 - 12:30 மணி; மாலை 4:30 - 10:00 மணி