சிலை இல்லாத கோயில்
இலங்கையின் தென்கிழக்குக் கரையில் ஊவா மாகாணம் கதிர்காமம் கோயில் உள்ளது. இங்கு 'கப்புறாளைமார்' என்னும் சிங்களர்கள் தங்களின் வாயைக் கட்டி கருவறையில் உள்ள திரைக்குப் பின்புறம் நின்று பூஜை செய்வர். இதை விட ஆச்சர்யம் என்ன என்றால் திரைக்குப் பின்புறம் முருகனின் சிலை இல்லை. கருவறையில் உள்ள பெட்டிக்கு பூஜை நடக்கிறது. சிவனின் நெற்றிக்கண்ணில் அவதரித்த முருகன் இங்கு வள்ளியை காதல் மணம் புரிந்ததால் இத்தலம் 'கதிர்காமம்' எனப் பெயர் பெற்றது. இவரை கதிர்காம சுவாமி, கதிரை நாயகன், கதிரை வேலன், மாணிக்க சுவாமி, கந்தக்கடவுள் என அழைக்கின்றனர். வள்ளியை மணம் புரிந்ததால் தனக்கு பிடித்த இடம் கதிர்காமம் என இங்கு கோயில் கொண்டார். இன்னொரு வரலாற்றின்படி சூரபத்மனை வதம் செய்வதற்காக முருகன் கதிர்காமத்திற்கு வந்தார். இங்கு ஓடும் மாணிக்க கங்கை நதியின் அருகில் பாசறை அமைத்தார். சூரனுடன் போரிட்டு வெற்றி பெற்ற பின் நவகங்கைத் தீர்த்தத்தை உருவாக்கி தேவர்கள் வழிபடுவதற்காக இங்கு எழுந்தருளினார். காவடி எடுத்தல், கற்பூரச் சட்டி எடுத்தல், அங்கப்பிரதட்சணம் செய்தல், தேங்காய் உடைத்தல், தீ மிதித்தல் என நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். கதிர்காம மலையில் இருந்து கிடைக்கும் வெண்ணிறக் கட்டியை திருநீறாக தருகின்றனர். இங்குள்ள பழங்குடியினர் முருகனைத் தங்களின் மாப்பிள்ளையாக கருதுகின்றனர். 'வனமுறை வேடன் அருளிய பூசை மகிழ் கதிர்காமம் உறைவோனே' என அருணகிரிநாதர் பாடியுள்ளார். இங்கு பூஜை செய்யும் கப்புறாளைமார் என்ற சிங்களர்கள் தங்களை வள்ளியின் வழித்தோன்றல் என்கின்றனர். எல்லாளன் என்ற தமிழ் மன்னரை வெற்றி பெற விரும்பிய துட்டகெமுனு என்ற சிங்கள மன்னன் கதிர்காமத்து முருகனிடம் வேண்டுதல் வைத்து விரதம் இருந்தான். அதன்படி வெற்றி பெற்றதால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கோயில் எழுப்பினான். விநாயகர், பெருமாள், தெய்வானை சன்னதிகள் உள்ளன. கதிர்காமர் (முருகன்) தெற்கு நோக்கியும், வள்ளி வடக்கு நோக்கியும் எதிரெதிரில் உள்ளனர். இங்கு முருகனின் கருவறை வண்ணத் திரையால் மூடப்பட்டிருக்கும். அதில் வள்ளி, தெய்வானையுடன் முருகனின் ஓவியம் வரையப்பட்டிருக்கும். பக்தர்கள் தரும் அர்ச்சனைப் பொருட்களை திரைக்குள் சென்று கப்புறாளைமார் சுவாமிக்கு சமர்ப்பிப்பர். காஷ்மீரைச் சேர்ந்தவர் துறவி கல்யாணகிரி. 12 ஆண்டுகள் தவத்தில் ஈடுபட்ட இவரது சமாதி இங்குள்ளது. முத்துலிங்க சுவாமிகள் எனப்படும் இவர் வழிபட்ட சரவணபவ யந்திரமே கருவறையில் இருப்பதாகச் சொல்வர். எப்படி செல்வது:* கொழும்பில் இருந்து 280 கி.மீ.,* கண்டியில் இருந்து 210 கி.மீ.,விசேஷ நாள்: வைகாசி விசாகம், ஆடி அமாவாசை, திருக்கார்த்திகை, தை முதல் நாள், மாசிமகம்.நேரம்: அதிகாலை 4:30 - இரவு 11:00 மணிதொடர்புக்கு: 94472 - 235 122அருகிலுள்ள கோயில்: சீதாஎலியா சீதையம்மன் 140 கி.மீ.,(பிரிந்தவர் சேர...)நேரம்: காலை 8:00 - 1:00 மணி; மதியம் 2:00 - 6:30 மணிதொடர்புக்கு: 94522 - 222 038