உள்ளூர் செய்திகள்

வாஸ்து தோஷமா...

வீடு, நிறுவனங்களில் உள்ள வாஸ்து தோஷத்தை போக்குபவராக தெலுங்கானா மாநிலம் வாராங்கல் மாவட்டம் காசிப்பேடு சுயம்பு வெள்ளெருக்கு விநாயகர் இருக்கிறார். பக்தர் ஒருவரின் கனவில் தோன்றி, குறிப்பிட்ட இடத்தில் வெள்ளெருக்கின் வேரில் சுயம்பு மூர்த்தியாக இருப்பதாக விநாயகர் தெரிவித்தார். அதை எடுத்து காசிப்பேடு என்னும் இப்பகுதியில் வைத்து கோயில் கட்டினர். பக்தர்களின் அமோக வரவேற்பால் கோயில் விரிவுபடுத்தப்பட்டது. ஆவணியில் சித்திபுத்தி தேவியருடன் கல்யாண உற்ஸவம் நடத்தப்பட்டது. பிரபல மடங்களைச் சேர்ந்த பீடாதிபதிகள் மூலம் 'கணபதி யோகம்' எனும் பட்டாபிஷேக உற்ஸவத்தையும் நடத்தினர். இமாலய பிரதேசத்தைச் சேர்ந்த பக்தரின் கனவில் தோன்றி 'தனக்கு வெள்ளிக் கவசம் சாத்தி அழகு பார்க்க வேண்டும்' என விநாயகர் கேட்க அவரும் காணிக்கை செலுத்தினார். விநாயகர் சதுர்த்தியன்று தங்க முலாம் பூசப்பட்ட சிம்மாசனத்தில் விநாயகரை எழுந்தருளச் செய்கின்றனர். சங்கடஹர சதுர்த்தியன்று பக்தர்கள் கூட்டம் அலை மோதும். வடஇந்திய கட்டட பாணியில் கோயிலின் முகப்பு அமைக்கப்பட்டுள்ளது. ஆதிகணபதி, அன்னபூரணி, அய்யப்பன், யோக ஆஞ்சநேயர் சன்னதிகள் உள்ளன. கோரிக்கைகள் நிறைவேறவும், வாஸ்து தோஷம் தீர 16, 21 செவ்வாய்க்கிழமை தொடர்ந்து தரிசனம் செய்கின்றனர். இக்கோயிலில் செவ்வாய் தோறும் கணபதி ஹோமம் நடக்கிறது. எப்படி செல்வது: வாராங்கல்லில் இருந்து 11 கி.மீ., துாரத்திலுள்ள காசிப்பேடு விஷ்ணுபுரி காலனியில் கோயில் உள்ளது.விசேஷ நாள்: சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி.நேரம்: காலை 7:00 - 12:00 மணி; மாலை 5:00 - 8:00 மணிதொடர்புக்கு: 93948 10881அருகிலுள்ள கோயில் : வாரங்கல் பத்ரகாளியம்மன் 11 கி.மீ., (எதிரி பயம் தீர...)நேரம்: அதிகாலை 5:30 - 1:00 மணி; மதியம் 3:00 - 8:00 மணிதொடர்புக்கு: 94910 00707