கலங்காதே மனமே!
நாளைய பொழுதை இறைவனுக்கு அளித்து நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு, உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு... என்னும் பாடல் தோல்வி, விரக்தி அடைந்தவருக்காக எழுதப்பட்ட ஆறுதல் வரிகள். உணர்வுபூர்வமான வரிகள் துன்பங்கள் குறுக்கிட்டாலும் பக்தியால் அதை கடந்து வெற்றி கண்ட ஆன்மிகவாதிகள் பலர் உள்ளனர். உதாரணமாக...* கல்லுடன் பிணைத்து கடலில் இட்டாலும் கரை சேர்ந்த திருநாவுக்கரசர்.* தந்தையே கொலை செய்ய முயற்சித்தாலும் உயிர் பிழைத்த பிரகலாதன். * சுடுகாட்டில் அடிமை வேலை செய்த மன்னர் அரிச்சந்திரன். * பெற்ற தாயைப் புறக்கணித்து சகோதரனான ராமனுக்கு வாழ்வை அர்ப்பணித்த தம்பி பரதன்.* இளம் வயதிலேயே கணவரை இழந்தவளும் பாண்டவரின் தாயுமான குந்தி. * சபையில் உறவினர்களின் முன்னிலையில் அவமானப்படுத்தப் பட்ட விதுரர்.* அம்புப் படுக்கையில் கிடந்தாலும் ஆறு மாதம் உயிர் துறக்காமல் இருந்த பீஷ்மர்.* வறுமையிலும் வளமாக வாழ்ந்த கிருஷ்ணரின் பால்ய நண்பர் குலேசர்* பாண்டுரங்கனின் பக்தர்களான கண் பார்வை இல்லாத சூர்தாசர், மாற்றுத்திறனாளி கூர்மதாசர். கைகள் வெட்டப்பட்ட சாருகாதாசர், கை, கால்களை வெட்டி பாழுங்கிணற்றில் தள்ளப்பட்ட ஜெயதேவர்.* ஒவ்வொரு முறையும் மனைவியால் அவமானத்திற்கு ஆளான சந்த் துக்காராம், கணவரால் துன்பத்திற்கு ஆளான குணவதிபாய்.* குழந்தையை பறிகொடுத்த நிலையிலும் கலங்காத குருவாயூரப்பனின் பக்தர் பூந்தானம்* குருநாதர் ராமானுஜருக்காக கண்களை இழந்த சீடர் கூரத்தாழ்வார்* சகோதரனால் கொடுமைக்கு ஆளான தியாகராஜ சுவாமிகள்* நரசிம்மர் சன்னதியில் விஷம் அருந்திய சுவாதி திருநாள் மகாராஜா.ஆன்மிகவாதிகளான இவர்கள் எந்நிலையிலும் மனம் கலங்கியதில்லை. கடவுள் நம்முடன் இருக்கிறார் என்ற நம்பிக்கையே இதற்கு காரணம். இவர்களை போல நாமும் வாழ வேண்டுமானால் நாயன்மார், ஆழ்வார், ஞானியரின் உபதேசங்களை பின்பற்ற வேண்டும். கடவுள் எந்த சூழலிலும் காப்பாற்றுவார் என முழுமையாக நம்ப வேண்டும். இதனால் துன்பத்தை எளிதில் கடக்கலாம். என்ன நடத்தாலும், எதை இழந்தாலும் கடவுளால் நிகழ்ந்தது என்ற எண்ணம் வரும். அன்பு, சத்தியம், நியாயம், தர்மம் போன்ற நற்பண்புகள் உண்டாகும். அந்நிலையில் அந்த பக்தர் எதை நினைக்கிறாரோ அப்படியே ஆவது உறுதி.