உள்ளூர் செய்திகள்

நிரந்தர தீர்வுக்கு...

'எதை தின்றால் பித்தம் தெளியும்' என மனிதர்கள் பிரச்னைகளுடன் போராடுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் அதில் இருந்து விடுபட்டு நிரந்தர தீர்வு பெற விரும்பினால் திருநெல்வேலி மாவட்டம் மேலஓமநல்லுார் மந்திரமூர்த்தியை தரிசிப்பது நல்லது. ரேணு முனிவரின் வேண்டுதலுக்காக கங்கை அவருக்கு மகளாக பிறந்தாள். 'ஆதிரை' என பெயரிட்டு வளர்த்த முனிவர் தன் மகளை சிவபக்தையாக்கினார். இந்நிலையில் அப்பகுதியை ஆட்சி செய்த மன்னர், குழந்தைப் பேறு இல்லாததால் ஆதிரையை தத்தெடுத்து அரண்மனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு ஒருமுறை ஆதிரைக்கு காட்சியளித்து, மந்திரேசுரம் என்னும் இடத்திற்கு அழைத்துச் சென்றார் சிவபெருமான். மகளைப் பிரிந்ததால் மன்னர் வாழப் பிடிக்காமல் உயிரை விடத் துணிந்தார். அப்போது 'தாமிரபரணி ஆற்றங்கரையில் யாகம் நடத்தினால் உன் மகளைக் காணலாம்' என அசரீரி ஒலித்தது. அதன்படியே யாகம் நடத்த மணக்கோலத்தில் சிவனுடன் ஆதிரை காட்சியளித்தாள். மகளைப் பிரியப் போகிறோமே என மன்னர் வருந்தவே, ஆதிரையை ஆறாக்கி வயிரமலையில் ஓடச் செய்தார் சிவன். அந்த ஆறு தாமிரபரணியுடன் சேர்ந்து மந்திரேசுரம் கோயிலைக் கடந்து சென்றது. இதன்பின் தேவசிற்பியான மயனால் மேலஓமநல்லுார் கோயில் கட்டப்பட்டது. கருவறையில் ஆமை ஓட்டின் வடிவமாக சுயம்பு மேனியாக மூலவர் இருக்கிறார். பிரணவேஸ்வரர், மந்திரமூர்த்தி என்பது சுவாமியின் திருநாமம். ஏவல், பில்லி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வில்வமாலை சாத்துகின்றனர். அம்மனின் திருநாமம் செண்பகவல்லி. திருமணத்தடையை போக்குபவள் இவள். அகத்தியர், உரோமஷ முனிவர்கள் தரிசித்துள்ளனர். சுவாமி, அம்மனின் பாதங்களில் நம் ஜாதகத்தை வைத்து வழிபட கிரக தோஷம் விலகும். எப்படி செல்வது: திருநெல்வேலி - பாபநாசம் செல்லும் சாலையில் 15 கி.மீ., துாரத்தில் பிராஞ்சேரி. அங்கிருந்து 6 கி.மீ.,விசேஷ நாள்: திங்கட்கிழமை, பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி.நேரம்: காலை 7:00 - 10:30 மணி; மாலை 4:30 - 6:15 மணிதொடர்புக்கு: 99946 77321அருகிலுள்ள தலம்: திருப்புடைமருதுார் நாறும்பூநாதர் கோயில் 26 கி.மீ., (விருப்பம் நிறைவேற...)நேரம்: காலை 6:00 - 10:30 மணி; மாலை 5:00 - 7:30 மணிதொடர்புக்கு: 99624 51268