தம்பதி ஒற்றுமைக்கு இங்கே வாங்க!
திருமணத்தின் போது பெரியவர்கள், 'வாழையடி வாழையாக வளர்க' என்று வாழ்த்துகிறார்கள். தம்பதிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் இது செய்யப்படுகிறது. 'வளர்க' என்பதன் சமஸ்கிருத சொல்லே அட்சயம். புதுமணத்தம்பதிகள் அட்சயமாய் நல்வாழ்வு வாழ, வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டான் ரங்கநாதரை வணங்கி வரலாம்.தல வரலாறு: மகாலட்சுமிக்கும், சரஸ்வதிக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற சர்ச்சை ஏற்பட்டது. இதற்கு தீர்ப்பு கூறும்படி பிரம்மனிடம் சென்றனர். மகாலட்சுமி தான் பெரியவள் என பிரம்மா தீர்ப்பு கூறினார். இதனால் சரஸ்வதிக்கு கோபம் ஏற்பட்டு, பூலோகத்திலுள்ள சாசிய மலையில், தனது நிலை உயர வேண்டி தவம் செய்தாள். இந்நிலையில் பிரம்மா பெருமாளுக்கு சிறப்பு செய்வதற்காக ஒரு யாகம் தொடங்கினார். நியதிப்படி யாகத்தை தம்பதி சமேதராக நடத்த வேண்டும். ஆனால், சரஸ்வதி யாகத்திற்கு வர மறுத்தாள். எனவே பிரம்மா, சரஸ்வதியின் அம்சமாக ஒரு பெண்ணைப் படைத்து, அவளுக்கு சாவித்திரி என பெயர் சூட்டி, அவளை மணந்து யாகத்தை தொடங்கினார்.இதனால் கோபமடைந்த சரஸ்வதி, பிரம்மன் ஆரம்பித்த யாகத்தை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் 'க்ஷீரம்' (பாலாறு)என்ற பெயரில் நதியாக மாறி, வெள்ளப்பெருக்கெடுத்து யாக குண்டத்தை உடைக்கும் நோக்கத்தில் ஓடிவந்தாள்.பெருமாள், சரஸ்வதியை சமாதானம் செய்தார். நதியின் ஓட்டத்தை தடுக்க, ஆதிசேஷனை நதியின் குறுக்கே படுக்க வைத்து, அதில் சயனித்தார். பின்னர், பிரம்மா யாகத்தை சிறப்பாக முடித்தார். சரஸ்வதியும் சாவித்திரியும் ஒன்றே என்பதை விளக்கிய பெருமாள், அவளை பிரம்மனுடன் மீண்டும் இணைத்து வைத்தார். பெருமாள் பூலோகத்தில் விரும்பி வந்து பள்ளி கொண்ட இடம் என்பதால், இவ்வூர் 'பள்ளிகொண்டான்' எனப்பட்டது. இந்தப் பெருமாள் 'உத்தர ரங்கநாதர்' எனப்படுகிறார்.சிறப்பம்சம்: பெருமாள் வைகுண்டத்தில் பாற்கடலில் பள்ளி கொள்வார். பூலோகத்தில் ஆற்றில் பள்ளி கொண்டதால், இத்தலத்து ஆறுக்கு 'பாலாறு' என்று பெயர் ஏற்பட்டது. இத் தலத்தில் ஒருநாள் இரவு தங்கி பெருமாளை வழிபட்டால் மோட்சம் கிடைக்கும் என பிரமாண்ட புராணம் கூறுகிறது.இங்கு திருமணம் செய்து கொண்டால், தம்பதியர் மனமொத்து வாழ்வர் என்பது நம்பிக்கை. அந்நியர் படையெடுப்பின் போது, இங்குள்ள ரங்கநாதர் மறைக்கப்பட்டு, சிறிய ரங்கநாதர் சிலை செய்து, கோவிலில் பாதுகாக்கப்பட்டது. இவர் 'சோட்டா ரங்கநாதர்' எனப்படுகிறார். பெருமாளின் திருமேனி சாளக்கிராமத்தால் ஆனது. தனி சன்னதியில், தாயார் ரங்கநாயகி இருக்கிறார். உள்பிரகாரத்தில் உடையவர், ராமர், நவநீதகண்ணன், ஆண்டாள், அனுமன், மணவாள மாமுனிகள், கருடாழ்வார், குலசேகரஆழ்வார், நம்மாழ்வார் சன்னதிகள் உள்ளன. கோவிலுக்கு தெற்கே இரண்டு கி.மீ. தூரத்தில் பீஜாசலம் என்ற மலைக்குன்று உள்ளது.திருவிழா: சித்திரையில் பிரமோற்ஸவம், வைகாசி விசாகத்தில் கருடசேவை, ஆனியில் ஜேஷ்டா திருமஞ்சனம், திருவாடிப்பூரம், கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி, திருக்கார்த்திகை, வைகுண்ட ஏகாதசி, தை மாதம் கிரிவலம், மாசி தெப்பம், பங்குனி உத்திரம்.இருப்பிடம்: வேலூர்-பெங்களூரு சாலையில் 21 கி.மீ. தூரத்தில் பள்ளி கொண்டான். இங்கிருந்து குடியாத்தம் சாலையில் ஒரு கி.மீ. சென்றால் கோவில்.நேரம்: காலை 8:00-12:00 மணி மாலை 4:00 - 8:00 மணி.அலைபேசி: 94439 89668; 94436 86869