குழந்தைப்பேறுக்கு பெரணமல்லூர் வாங்க!
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூரில் சிறு குன்றின் மீது வரதஆஞ்சநேயர் கோவில் உள்ளது. குழந்தைப் பேறு இல்லாதோர் இவரை வழிபட்டால் குறை தீரும். தல வரலாறு: 200 ஆண்டு களுக்கு முன் இப்பகுதியில் வாழ்ந்த ஒரு தம்பதிக்கு குழந்தைப் பேறு இல்லை. ஒருநாள் அவர்கள், வயலில் உழுத போது கலப்பையில் ஏதோ தட்டுப்பட்டது. அங்கு தோண்டியதில், ஆஞ்சநேயர் சிலை கண்டு வியந்தனர். அருகில் இருந்த குன்றின் மீது ஊரார் உதவியுடன் சிலையைப் பிரதிஷ்டை செய்தனர். ஆஞ்சநேயரின் அருளால் அடுத்த ஆண்டிலேயே தம்பதிக்கு குழந்தைப் பேறு உண்டானது. இச்செய்தி ஊரெங்கும் பரவ, புதிதாக கோவில் கட்டப்பட்டது. வரத ஆஞ்சநேயர் என்னும் பெயருடன் வீற்றிருக்கும் இவர், வடக்கு நோக்கி முகம் காட்டியபடி நின்ற கோலத்தில் இருக்கிறார். வலது கையால் பக்தர்களுக்கு அபயம் அளித்தும், இடது கையில் சக்தி மிக்க தண்டம் ஏந்தியும் இருக்கிறார். அமாவாசையன்று இவரை வழிபடுவது சிறப்பாகும். தடை போக்கியவர்: காலப்போக்கில் இங்கு வழிபாடு இல்லாமல் போனது. சில ஆண்டுகளுக்கு முன், சென்னையை சேர்ந்த சிறுவன் ஒருவன், கோவிலை தூய்மை செய்து வழிபட்டான். இதைக் கண்ட ஊர் மக்களும் சிறுவனுடன் சேர்ந்து பணியாற்றினர். அதன் பின் வரதஆஞ்சநேயர் அறக்கட்டளை உருவாக்கப்பட்டு, கோவில் புதுப்பிக்கப் பட்டது. சென்னை நங்கநல்லூர் ஆஞ்சநேயர் சிலையை வடிக்க, இஞ்சிமேடு என்னும் இடத்தில் கல் எடுக்கப்பட்டது. அதை கொண்டு செல்வதில் பல தடைகள் குறுக்கிட்டன. பெரணமல்லூர் வரதஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடத்திய பின்னர் நிலைமை சீரானது.அமாவாசை கிரிவலம்: அமாவாசையன்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடக்கும். பக்தர்கள் தங்களின் விருப்பம் நிறைவேற கிரிவலமாக குன்றினைச் சுற்றுகின்றனர். அமாவாசை கிரிவலத்தால் மன தைரியம் உண்டாகும். உடல்நலம் பெருகும். திருமணத்தடை, தம்பதி ஒற்றுமையின்மை, குழந்தை இல்லாமை, கிரக தோஷம் நீங்கும். அனுமன் ஜெயந்தியன்று சுவாமிக்கு 1008 வடை மாலை, வெற்றிலை மாலை சாத்தப்படும். அன்று நடக்கும் அன்னதானத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர். இருப்பிடம் : சென்னை தாம்பரத்தில் இருந்து வந்தவாசி வழியாக பெரணமல்லூர் 90 கி.மீ., செய்யாறு, வந்தவாசியில் இருந்து 22 கி.மீ. ஆரணியில் இருந்து 20 கி.மீ., நேரம்: காலை 7:00 - இரவு 8:00 மணிஅலைபேசி: 97903 87313