குழந்தை வரம் தரும் குழந்தைசுவாமி
குழந்தையின் முகத்தை பார்த்தாலே கவலை ஓடிவிடும். அப்படிப்பட்ட பிஞ்சுக்குழந்தை இல்லையே என தவிக்கிறீர்களா. கவலை வேண்டாம். மகாராஷ்டிரா மாநிலம் புனேவிற்கு வாருங்கள். இங்கு தேவூரில் குழந்தை சுவாமியான சிந்தாமணி விநாயகர் உங்களுக்காக காத்திருக்கிறார். முன்பு இப்பகுதியை ஆட்சி செய்த அபிஜித் என்ற மன்னருக்கு குழந்தை இல்லாமல் இருந்தது. வைசம்பாயனர் என்ற முனிவரிடம் ஆலோசனை கேட்டார். இதற்கு அவர், 'மனைவி குணவதியுடன் காட்டிற்கு சென்று தவம் செய்' என வழிகாட்டினார். அவரும் அவ்வாறு செய்யவே ராணி குணவதி அழகான ஆண் குழந்தையை பெற்றாள். அக்குழந்தைக்கு 'கணராஜன்' என்று பெயர் வைத்தனர். இளவரசரான கணராஜன் பலசாலியாக இருந்தாலும், பொறுமையில்லாதவராக இருந்தார். இந்த குணத்தாலேயே அவருக்கு அழிவு ஏற்படும் காலமும் வந்தது. ஒருநாள் இளவரசர் வேட்டையாட சென்றார். பின் களைப்படைந்த படைகளுடன் அருகில் இருந்த கபில முனிவரின் ஆசிரமத்திற்கு சென்றார். இவர்களை அன்புடன் வரவேற்ற முனிவர், இளைப்பாறும்படி சொன்னார். பின் சிறிது நேரத்திலேயே படைக்கு தேவையான அறுசுவை உணவையும் தயார் செய்துவிட்டார் முனிவர். 'எப்படி அதற்குள் உணவு தயாரானது' என ஆச்சர்யப்பட்டு கேட்டார் இளவரசர். இதற்கு, 'தேவலோக இந்திரன் எனக்கு கொடுத்த சிந்தாமணி என்ற அபூர்வ ஆபரணம் இது. காமதேனு, அட்சயப்பாத்திரம் போல கேட்டதை கொடுக்கும் சக்தி இதற்கு உண்டு. இதன் மூலமே உணவை தயாரித்தேன்' என ஆபரணத்தை காட்டினார் முனிவர். ஒளி மிகுந்த இந்த ஆபரணத்தை பார்த்ததும் இளவரசருக்கு பேராசை வந்தது. ஆபரணத்தை பலமுறை கேட்டும் முனிவர் தராததால், பறித்துச் சென்றார் இளவரசர். மனம் வருந்திய முனிவர், தனது இஷ்ட தெய்வமான துர்காதேவியிடம் முறையிட்டார். அவள் கனவில் தோன்றி விநாயகரை வழிபடுமாறு வழிகாட்டினாள். அதன்படி தவம் செய்து விநாயகரிடம், ஆபரணத்தை மீட்டுத்தரும்படி வேண்டினார். இதன்படி விநாயகர் கடம்ப விருட்சத்தின் கீழ் இளவரசனை வென்றார். பின் மன்னர் அபிஜித் சரணடைந்து சிந்தாமணியைத் தந்தார். விநாயகர் இதை முனிவரிடம் கொடுக்க, அவரோ இது சுவாமியிடம் இருப்பதுதான் சிறந்தது என விநாயகரிடமே ஒப்படைத்தார். பின் அந்தக் கடம்ப விருட்சத்தின் அருகே விநாயகரின் விக்ரகத்தை நிறுவி கோயில் கட்டினார் முனிவர். படைப்புக் கடவுளான பிரம்மா இவரை வழிபட்டு, மனஅமைதியை பெற்றார். இக்கோயில் முலா, முடா நதிக்கரையில் வடக்கு திசையை நோக்கி உள்ளது. விநாயகரின் கண்ணில் வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன. மராட்டிய பேஷ்வா மாதவராவ், இவரை இஷ்ட தெய்வமாக கொண்டு தனது மாளிகையையும் இந்நகரில் அமைத்து இருந்தார். எப்படி செல்வது: புனேவில் இருந்து 27 கி.மீ., விசேஷ நாள்: சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்திநேரம்: அதிகாலை 5:00 - 10:00 மணி; மாலை 5:00 - 8:00 மணிஅருகிலுள்ள தலம்: பாலி மோரேஷ்வர் (விநாயகர்) கோயில் 220 கி.மீ., (முயற்சியில் வெற்றி பெற...)நேரம்: அதிகாலை 5:00 - 10:00 மணி; மாலை 5:00 - 8:00 மணி