உள்ளூர் செய்திகள்

பைரவருக்கு நாய் காணிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் துார்வாசபுரத்திலுள்ள பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியன்று நாய் காணிக்கை செலுத்தினால் கடன்தொல்லை தீரும். தலவரலாறு: அயோத்தியில் இருந்து ராமர் வனவாசம் வந்த போது, ரிஷிகளுடன் தங்கியிருந்தார். அதில் ஒருவரான துர்வாச மகரிஷி நெல்லி வனமான இப்பகுதியில் சுயம்பு லிங்கத்தை வழிபட்டு வந்தார். அந்த லிங்கம் காலப்போக்கில் மண்ணில் புதைந்தது. பிற்காலத்தில் மேய்ச்சல் பகுதியான இங்கு பசு ஒன்று குறிப்பிட்ட இடத்தில் பால் சுரந்தது. அதைக் கண்ட பசு மேய்ப்போன், மண்ணில் தோண்டிய போது, சிவலிங்கம் புதைந்து இருக்கக் கண்டான். பால் அபிஷேகம் செய்து வழிபட்டான். இதைஅறிந்த பாண்டிய மன்னன் சிவனுக்கு கோயில் கட்டினான். இதை தெரிவிக்கும் விதத்தில் கருவறையில் மீன் சின்னம் உள்ளது. கி.பி.1032ல் கட்டப்பட்டதாக கல்வெட்டுச் செய்தி கூறுகிறது. பாதாளத்தில் இருந்து கிடைத்ததால் சுவாமிக்கு 'பாதாளேஸ்வரர்' என்று பெயர் ஏற்பட்டது. 'சுந்தரேஸ்வரர்' என்றும் பெயருண்டு. துர்வாசரின் நிஜப்பெயர் துார்வாசர் என்பதாகும். 'துாரத்தில் வரும் போதே மணம் கமழ்பவர்' என்பது பொருள். இவர் தவம் செய்த பூமி என்பதால் ஊருக்கு 'துார்வாச புரம்' என்று பெயர். கருவறையின் முன் மண்டபத்தில் சுரங்கம் இருப்பதாகவும், அதில் துர்வாசர் இன்றும் தவம் செய்வதாக கூறுகின்றனர். கருவறையின் இடப்பக்கத்தில் துர்வாசர் பத்மாசனமிட்டு, தியான நிலையில் இருக்கிறார். மாணவர்கள் வியாழக்கிழமையில் வழிபட்டால் கல்வி வளர்ச்சி உண்டாகும் காலபைரவர் சன்னதி தருமபுரம் மடத்தைச் சேர்ந்த சடையப்பத் தம்பிரான், வைத்தியலிங்கத் தம்பிரான் என்பவர்களால் கட்டப்பட்டது. பைரவர் நின்ற கோலத்தில் கையில் கபாலம், பாம்பு, திரிசூலம், உடுக்கை ஏந்தியபடி, நாய் வாகனத்துடன் தெற்கு நோக்கி காட்சியளிக்கிறார். தேய்பிறை அஷ்டமியன்று விசேஷ யாகம் நடக்கிறது. கிரக தோஷம் நீங்க பூசணிக்காயில் தீபமேற்றுகின்றனர். நினைத்தது நிறைவேற மண்ணால் ஆன நாயை காணிக்கையாக செலுத்துகின்றனர். சிவத்தலமாக இருந்தாலும், மக்கள் 'பைரவர் கோயில்' என்று கோயிலை அழைக்கின்றனர். பாதம்பிரியாள் அம்மன் தனி சன்னதியில் தெற்கு நோக்கி காட்சியளிக்கிறாள். வலது கையில் குவளை மலர் ஏந்தியபடி நிற்கும் அம்மனின் தலை நாணத்தால் சற்று சாய்ந்தபடி உள்ளது. செவ்வாய், வெள்ளிக்கிழமையில் நெய் தீபமேற்றி கன்னியர் வழிபட திருமணத்தடை நீங்கும். பவுர்ணமி விரதமிருந்து அம்மனை தரிசிக்க தீர்க்க சுமங்கலி பாக்கியம் உண்டாகும். செல்வது எப்படி: புதுக்கோட்டையில் இருந்து திருமயம் 22கி.மீ., அங்கிருந்து 4 கி.மீ., துாரத்தில் துார்வாசபுரம்விசேஷ நாட்கள்: சம்பக சஷ்டி, ஆனித்திருமஞ்சனம், திரியம்பக அஷ்டமி, மகாசிவராத்திரிநேரம்: காலை 7:00 - 11:00 மணி; மாலை 5:00 - 07:00 மணிதொடர்புக்கு: 94427 62219அருகிலுள்ள தலம் : 2 கி.மீ, துாரத்தில் கண்ணனுார் பாலசுப்பிரமணியர் கோயில்