வீட்டிற்குள்ளே பயந்து கிடந்து வெம்பி விடாதே!
* தன்னிடத்தில் உலகையும், உலகத்திடம் தன்னையும் எவன் காண்கிறானோ அவனே கண்ணுடையவன். இது தான் வேதம் சொல்லும் உறுதியான கருத்து.* கடவுள் எங்கும் இருக்கிறார். எல்லாம் கடவுள் தான். ஊருக்கு நடுவில் ஒரு கோயிலைக் கட்டி, அதில் ஒரு கல்லையோ, செம்பையோ நட்டு அங்கே தான் எல்லோரும் வந்து கும்பிட வேண்டும் என்ற நியமம் எதற்காக என்றால் சமுதாய ஒற்றுமை ஏற்படுவதற்காகத் தான்.* கோயில் வழிபாட்டால் ஊரில் ஒற்றுமை ஏற்படுகிறது. வீட்டில் எல்லாரும் சேர்ந்து வழிபடுவதால் குடும்ப ஒற்றுமை உண்டாகிறது.* பலவீனமானவர்களுக்கு மனிதன் எதுவரை அநியாயம் செய்கிறானோ, அதுவரை கலியுகம் இருக்கும். அநியாயம் உலகில் நீங்கினால் கலியுகம் முடிந்து கிருதயுகம் தொடங்கி விடும். * தியானத்தின் ஆற்றலை எளிதாக நினைக்க வேண்டாம். அதன் மூலம், மனிதன் தான் விரும்பும்படியே ஆகிறான். அனுபவத்தில் யார் வேண்டுமானாலும் இதனை உணர முடியும்.* உள்ளத்தில் இன்ன எண்ணங்களைத் தான் வளர்க்க வேண்டும். இன்ன எண்ணங்களை வளர விடக்கூடாது என்று நிச்சயிக்கும் அதிகாரம் இயற்கையிலேயே நமக்கு இருக்கிறது. அதைப் பயன்படுத்திக் கொள்பவன் நல்லவனாக வாழ்வான். * 'காலம் பணவிலை உடையது' என்ற பழமொழி ஆங்கிலத்தில் இருக்கிறது. பொழுது வீணாகக் கழிக்கப்படுமாயின், அதனால் உண்டாகும் லாபம் கிடைக்காமல் போகும்.* எதையும் நினைத்த மாத்திரத்தில் சூட்டோடு செய்யும்போது அதில் வெற்றி பெரும்பாலும் நிச்சயமாகக் கிடைக்கும். அதைத் தூங்கப் போட்ட பிறகு செய்யப்போனால் பலன் குறைந்து போகும்.* எந்தச் செயலுக்கும் நாள், நட்சத்திரம், லக்னம் பார்ப்பது மூடத்தனம். இதனால் உண்டாகும் காலம், பொருள் விரயத்திற்கு எல்லையே கிடையாது.* ஒருவன் தன் மனமறிந்து உண்மையானவனாக நடக்க வேண்டும். இல்லாவிட்டால் அவமானம், பாவம் உண்டாகும் என்று மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.* வாய்ப்பேச்சு ஒரு மாதிரியாகவும், செய்கை வேறொரு மாதிரியாகவும் உடையவர்களின் உறவைக் கனவிலும் கொள்வது தீமை தரும் என்று திருவள்ளுவர் குறளில் சொல்லியிருக்கிறார்.* மனிதனுக்குப் பகை வெளியில் இல்லை. அவனுக்குள்ளேயே பயம், சந்தேகம், சோம்பல் முதலிய எதிரிகள் மலிந்து கிடக்கிறது. இந்தக் குணங்கள் வெற்றியைத் தடுக்கும் உட்பகைவர்களாக உள்ளன.* நம்பிக்கை உண்டானால் வெற்றி உண்டு. நம்பிக்கையின் முக்கிய லட்சணம் என்ன என்றால் விடாமுயற்சி. நிலைத்த நம்பிக்கை இருக்குமானால் செயல்கள் ஒருபோதும் தடைபடுவதில்லை.* கண்ணைத் திறந்து கொண்டு படுகுழியில் விழுவது போல, மனிதன் நன்மைக்கான வழிவகைகளை நன்றாக உணர்ந்தும், தீமையை உதறும் மனவலிமை இல்லாதவனாகத் தத்தளிக்கிறான்.* அன்பே இன்பம் தரும். பகை எல்லாரையும் அழிக்கும். எங்கும் எப்போதும் எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துங்கள்.* அச்சமே மடமை. அச்சமில்லாமையே அறிவு. தைரியமே ஜெயம் அளிக்கும். துன்பம் ஏற்படும்போது உள்ளம் நடுங்காதே.தைரியமே ஜெயம் என்கிறார் வீரக்கவி பாரதி