ஏக்கம் தீர்க்கும் ஏகநாதர்
நீண்ட நாட்களாக போராடியும் நினைத்தது நடக்கவில்லையே என்ற ஏக்கமா...மதுரை மாவட்டம் செக்கானுாரணி அருகிலுள்ள கிண்ணிமங்கலம் ஏகநாதரை, பிரதோஷத்தன்று தரிசித்தால் ஏக்கம் தீர்ப்பார்.தல வரலாறு: மதுரை நாகமலையைச் சேர்ந்த சத்குரு சுவாமி, தனக்கு சமாதி அமைக்கும் இடத்தை தேர்ந்தெடுக்க விரும்பினார். ஒரு மாடு மேய்க்கும் சிறுவனிடம், அடியில் துளை உள்ள காந்தக் கிண்ணி ஒன்றை (கிண்ணம்) கொடுத்து காராம்பசுவின் பாலைக் கறக்கும்படி கூறினார். துளையுள்ள கிண்ணமாக இருந்தாலும், ஒரு துளி பால் கூட சிந்தாமல் கிண்ணி நிரம்பியது கண்ட சிறுவன், நடந்ததை ஊராரிடம் தெரிவித்தான். சுவாமியின் மகிமையறிந்த மக்கள், தங்கள் பகுதிக்கு வரும்படி அழைத்தனர். அப்போது சுவாமி, தாம் எந்த இடத்தில் இருக்க வேண்டும் என்பதை காந்தக் கிண்ணி தீர்மானிக்கும் என்று சொல்லி, கையில் இருந்த கிண்ணியை ஆகாயம் நோக்கி வீசினார். அது 'மங்கலப்பட்டி' கிராமத்தில், சங்கொலி எழுப்பி விழுந்தது. கிண்ணி விழுந்ததால் இப்பகுதி 'கிண்ணிமங்கலம்' எனப்பட்டது. சுவாமி ஜீவசமாதி அடைந்த இடத்தில், சிவனுக்கு கோவில் கட்டி 'ஏகநாதர்' என பெயர் சூட்டினர்.குதிரையான குட்டிச்சுவர் கிண்ணிமங்கலத்தில் ஒரு குட்டிச்சுவர் மீது அமர்ந்த சுவாமி, தவசக்தியால் மக்களுக்கு மண்ணைக் கொடுக்க, அது அவரவர் விரும்பிய பொருளாக மாறியது. ஒருமுறை அந்த வழியாக இப்பகுதியை ஆண்ட மன்னன் வந்த போது, மக்கள் யாரும் அவனைப் பொருட்படுத்தவில்லை. ''மன்னனாகிய என்னை அலட்சியப்படுத்தும் அளவுக்கு இந்த குட்டிச்சுவர் சாமியாருக்கு மக்கள் கூட்டமா?' எனக் கோபத்தில் கத்தினான். உடனே சுவாமி, கையால் குட்டிச்சுவரை தட்டிக் கொடுக்க, அது குதிரையாக மாறி விண்ணில் பறந்தது. இந்த அதிசயம் கண்ட மன்னன் சுவாமியிடம் மன்னிப்பு கேட்டதோடு, குதிரை வட்டமிட்ட நிலப்பகுதியை மானியமாக வழங்கினான்.கோவில் அமைப்பு கருவறையை அடுத்துள்ள அர்த்த மண்டபத்தில் ஆனந்தவள்ளி அம்மன் அருள்பாலிக்கிறாள். கன்னி மூலை கணபதி, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், பைரவர், வீரபத்திரர் சன்னதிகள் உள்ளன. திருவிழா : சுவாமி ஜீவசமாதி அடைந்த வைகாசி பூர நட்சத்திர நாளில் சிறப்பு பூஜை நடக்கும். நினைத்தது நடக்க, ஏக்கங்கள் தீர, மகா சிவராத்திரி, பிரதோஷ நாளில் சிவன், நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்கின்றனர்.எப்படி செல்வது: மதுரை - தேனி சாலையில் 18 கி.மீ., தூரத்தில் செக்கானுாரணி. இங்கிருந்து திருமங்கலம் சாலையில் 4 கி.மீ, தூரத்தில் கிண்ணிமங்கலம்.நேரம்: காலை 6:00 - 10:30 மணி, மாலை 5:30 - 8:00 மணி.