அனுபவி ராஜா அனுபவி! இயற்கையின் இனிமையை அனுபவி!
* மலர்களின் மணத்தை நுகருங்கள். பறவைகளின் இனிய குரலுக்கு காது கொடுங்கள். சூரிய உதயத்தை கண்டு மகிழுங்கள். இயற்கையின் மூலம் வாழ்வின் இனிமையை அனுபவியுங்கள்.* சந்தனம், மல்லிகை போன்ற மலர்களின் வாசனை காற்றின் திசையில் மட்டுமே நறுமணத்தைப் பரப்பும். ஆனால் நல்லவர்களின் புகழோ, காற்றையும் கடந்து நாலாபக்கமும் பரவி விடும்.* புண்ணியச் செயல்களில் மனிதன் விரைந்து ஈடுபடவேண்டும். பாவச்செயல்களில் இருந்து மனதைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.* அக்கறை, நற்குணம், அமைதி, பொறுமை மிக்க மனிதர்கள் எங்கிருந்தாலும் அவர்களை உலகம் போற்றி மதிக்கும். * பிறருக்கு உபதேசிக்கும் முன், மனிதன் முதலில் தன்னைப் பண்படுத்திக் கொள்ள வேண்டும். சுயகட்டுப்பாடே ஒழுக்கத்தின் அடிப்படை.* பணம், பட்டம், பதவி என எத்தனை சிறப்புகளை மனிதன் பெற்றிருந்தாலும் சிந்திக்கும் அறிவு இல்லாவிட்டால் அவை பயனற்றுப் போகும்.* அறிவாளியிடம் நட்பு கொள்வது உறவினர்களைக் காண்பதைப் போல இன்பத்தை அளிக்கும். மூடர்களின் நட்பு பகையாளியைப் போல துன்பத்திற்கு இடம் கொடுக்கும்.* இருதரப்பு வாதங்களையும் பொறுமையுடன் முதலில் கேட்க வேண்டும். அதன் பின் நடுநிலையோடு ஆராய்ந்து தீர்ப்பளிக்க வேண்டும்.* தனக்குத் தானே தலைவனாக மனிதன் திகழ வேண்டும். தன்னைத் தானே அடக்கப் பழகியவன் அரிய தலைமைப் பொறுப்பிற்கு தகுதி பெறுவான். * உண்மையை யாராலும் மறைக்க முடியாது. மேகத்தில் இருந்து விடுபட்ட நிலவு போல அது ஒருநாள் வெளிப்பட்டு விடும்.* பொற்காசு மழையே பொழிந்தாலும், பேராசைக்காரனுக்கு மனம் அடங்குவதில்லை. அவர்கள் வேட்டைக்காரனிடம் சிக்கிய முயல் போல அங்குமிங்கும் அலைவார்கள்.* அறிவுள்ள எதிரியைக் காட்டிலும் அறிவில்லாத நண்பர்களின் நட்பு தீமையை கொடுக்கும். இந்நிலையில் ஒருவன் தனித்து வாழ்வதே சிறந்தது.* மூடத்தனமான சடங்குகளை விட்டொழியுங்கள். ஒழுக்கத்தை உயிராக மதித்துப் போற்றுங்கள். அவசியமான சமயத்தில் மட்டும் பேசுங்கள். மற்ற நேரங்களில் அமைதியைக் கடைபிடியுங்கள்.* அன்பும், உண்மையும் நிரம்பியதாக வாழ்க்கை இருக்கட்டும். கோபம் என்னும் நெருப்பிற்கு சிறிதும் இடம் கொடுக்கக் கூடாது.* விழிப்போடு இருந்தால் வாழ்வு சுகமாக இருக்கும். துன்பம் நேரும் போது மனம் விட்டு அழுதால் மன அழுக்குகள் கரைந்து விடும்.* நேர்மையான பேச்சு நம் மனதிற்கு மட்டுமின்றி, அதைக் கேட்பவருக்கும் சமாதானத்தை ஏற்படுத்தும். உண்மை என்பதற்காக பிறர் மனம் புண்படும் விதத்தில் பேசுவது கூடாது.* பகையுணர்விற்கு முற்றுப்புள்ளி வையுங்கள். பகையை பகையால் வெல்ல முடியாது. அன்பு ஒன்றே அதற்குரிய ஒரே தீர்வு.* எந்தப் பணியில் ஈடுபட்டாலும் அதன் தரத்தில் அக்கறை கொள்ளுங்கள். அதுவே வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும்.* நமக்கு மட்டுமின்றி உலகத்திற்கும் பயன் அளிப்பதாக வாழ்க்கை இருக்க வேண்டும்.அழைக்கிறார் புத்தர்