உயர் பதவி கிடைக்க...
நான் நன்றாக வேலை செய்கிறேன். ஆனால் இன்னும் அப்படியே உள்ளேன். வாழ்க்கைத்தரம் உயரவில்லையே என வருத்தப்படுகிறீர்களா. ஆந்திர மாநிலம் கடப்பா ராயசோட்டி வீரபத்திரர் கோயிலுக்கு வாருங்கள். சிவபெருமானின் மாமனாரான தட்சன் அவரை அழைக்காமல் யாகம் நடத்தினார். இதனால் கோபப்பட்ட சிவபெருமான் யாகத்தை அழிக்க தனது அம்சமான வீரபத்திரரை அனுப்பினார். அவர் அதை அழித்த பின்பும் உக்கிரம் தணியவில்லை. இந்நேரத்தில் மாண்டவ்ய மகரிஷி என்பவர், அவரது தரிசனத்திற்காக சிவலிங்கம் அமைத்து தவம் இருந்தார். வீரபத்திரர் அவருக்கு உக்கிரமாக காட்சி கொடுத்தார். இதனால் மகரிஷி அவரைச் சாந்தப்படுத்தும்படி அம்பிகையிடம் வேண்டினார். அதன்படி அம்பிகை பத்ரகாளியாக மாறி இங்கு வந்து, அவரை சாந்தப்படுத்தினாள். மகரிஷியும் தான் தவமிருந்த இடத்தில் இருவரும் எழுந்தருளும்படி வேண்டினார். அதன்படி சுவாமியும் அம்பாளும் இங்கேயே தங்கினர். பிற்காலத்தில் மன்னர் ஒருவர் கோயில் எழுப்பினார். மூன்று நிலைகளை கொண்ட ராஜகோபுரத்தை கடந்தவுடன் வீரபத்திரரை தரிக்கலாம். மார்ச் மாதத்தில் ஐந்து நாட்கள் இவர் மீது சூரிய ஒளி விழுகிறது. முதல் நாளில் அவரது காலில் விழும் ஒளி, அடுத்தடுத்த நாட்களில் படிப்படியாக உடலில் விழுந்து, ஐந்தாம் நாள் முகத்தில் விழும். அருகே தட்சன் வணங்கியபடி அமர்ந்திருக்கிறார். வலப்புறத்தில் மாண்டவ்ய மகரிஷி பூஜித்த சிவலிங்கம் உள்ளது. இந்த லிங்கத்திற்கு பூஜை செய்த பிறகே, வீரபத்திரருக்கு பூஜை செய்யப்படும். வீரபத்திரர் காலையில் பால ரூபமாகவும், மாலையில் மீசையுடன் வீர கோலமாகவும் காட்சி தருகிறார். இதனால் இவர் 'ராஜராயுடு' (அனைவருக்கும் தலைவர்) என போற்றப்படுகிறார். பெருமாள் கோயில்களைப் போல, இங்கும் வீரபத்திரரின் பாதம் பொறித்த சடாரியால் ஆசி வழங்கப்படுகிறது. உயர் பதவி, தலைமை பொறுப்பு கிடைக்க இவருக்கு அபிஷேகம் செய்து வழிபடலாம். அம்மை, தோல் வியாதி உள்ளவர்கள் இவரது பாதத்தில் தேங்காய் வைத்து பூஜித்து, தேங்காய் தண்ணீரை பிரசாதமாக குடித்தும், உடலில் தேய்த்துக் கொண்டால் பிரச்னை சரியாகும். வரசித்தி விநாயகர், காலபைரவர், சண்முகர், இரட்டை லிங்கம், அகோரசிவன், நவக்கிரக சன்னதிகளும் உள்ளன. இங்கு சிவலிங்கம், வீரபத்திரர் என இருவருக்கும் வீர நந்தி, சிவ நந்தி என இரண்டு நந்திகள் உள்ளன. இதுபோல் பத்ரகாளி சன்னதி அருகிலும் ஒரு நந்தி உள்ளது. எப்படி செல்வது: திருப்பதியில் இருந்து 120 கி.மீ., விசேஷ நாள்: நவராத்திரி, மாசியில் பிரம்மோற்ஸவம், திருக்கார்த்திகைநேரம்: அதிகாலை 5:00 - 12:30 மணி; மாலை 4:00 - 8:30 மணி தொடர்புக்கு: 98854 79428, 94410 12682, 08561 - 250 307அருகிலுள்ள தலம்: காளஹஸ்தி காளத்தியப்பர் (சிவன்) கோயில் (ராகு, கேது தோஷம் தீர...)நேரம்: அதிகாலை 5:00 - 12:00 மணி; மாலை 5:00 - 9:00 மணிதொடர்புக்கு: 85782 22240