உள்ளூர் செய்திகள்

வளமான வாழ்வு தருபவர்

திருவனந்தபுரம் கரமனையில் சத்தியவாகீஸ்வரர் என்னும் பெயரில் சிவன் கோயில் கொண்டிருக்கிறார். பிரதோஷ நாளில் இவரை தரிசித்தால் வளமான வாழ்வு அமையும். அனந்தன் காட்டிலுள்ள ஆற்றங்கரையில் கரமகரிஷி என்பவர், சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இந்த ஆறு மகரிஷியின் பெயரால் 'கரமனை' எனப் பெயர் பெற்றது. பின்னாளில் மழையின்றி ஆறு வறண்டது. அப்போது அந்த சிவலிங்கத்தை பூஜித்த அர்ச்சகரின் கனவில் தோன்றி, ''உக்கிரமாக இருக்கும் சுவாமியை சாந்தப்படுத்த அம்மன் இருக்க வேண்டும். அதற்கான சிலை மதுரை மீனாட்சியம்மன் கோயில் பொற்றாமரை குளத்தில் மூழ்கிக் கிடக்கிறது. அந்த அம்மனுடன் சுவாமியை வழிபட்டால் இப்பகுதி வளம் பெறும்'' என சிவன் தெரிவித்தார்.கனவு பற்றி அர்ச்சகர் தெரிவிக்க, மன்னரின் முயற்சியால் சிலை வரவழைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையடுத்து மழை பெய்து ஆற்றில் வெள்ளம் ஓடியது. சுவாமி சத்தியவாகீஸ்வரர் என்றும், அம்மன் 'கோமதி' என்றும் பெயர் பெற்றனர். ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று கரமனை ஆற்றங்கரையில் தீர்த்தவாரி நடக்கும். அதன் பின் சுவாமி, அம்மனும் வீதிகளில் எழுந்தருள்வர். விருப்பம் நிறைவேற பக்தர்கள் பத்துப்படி நெல் அல்லது அரிசியை அப்போது காணிக்கையாகத் தருவர். இதனை 'நெற்பறை' என்கின்றனர். கடன், விபத்து, நீண்டநாள் நோய் தீர கோமதியம்மனுக்கு புடவை, அரளிப்பூ மாலை சாத்துகின்றனர். நவராத்திரியின் போது லட்சார்ச்சனை நடக்கும். கோடை காலத்தில் வெப்பு நோய்களில் இருந்து விடுபட ஜலதாரை வழிபாடு செய்கின்றனர். சிவலிங்கம் மீது தாரா பாத்திரம் கட்டப்பட்டு அதிலுள்ள புனிதநீர் சொட்டு சொட்டாக சுவாமி மீது விழுவது ஜலதாரையாகும். தமிழ் மாத கடைசி ஞாயிறன்று விசேஷ ஹோமம் நடக்கும். இதில் பங்கேற்பவர்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும். கால்நடைகள் உடல்நலம் பெற தைப்பூசத்தன்று நந்தீஸ்வரருக்கு அரிசி மாவில் காப்பு சாத்துகின்றனர். கணபதி, சுப்பிரமணியர், தர்மசாஸ்தா, நாகர், அனுமன் சன்னதிகள் உள்ளன. யானை கட்டும் இடத்தில் விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.எப்படி செல்வது: திருவனந்தபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து நாகர்கோவில் ரோட்டில் 3 கி.மீ.,விசேஷ நாள்: விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, கந்தசஷ்டி, தைப்பூசம் 12 நாள் பிரம்மோற்ஸவம்நேரம்: அதிகாலை 5:15 - 11:30 மணி: மாலை 5:30 - 8:45 மணிதொடர்புக்கு: 0471 - 234 5667அருகிலுள்ள தலம்: திருவனந்தபுரம் அனந்த பத்மநாபசுவாமி கோயில்(7 கி.மீ.,)நேரம் : அதிகாலை 4:15 - 12:00 மணி; மாலை 5:00 - 8:00 மணிதொடர்புக்கு: 0471 - 245 0233