திருப்பம் ஏற்பட திருக்கோஷ்டியூர் போங்க!
வீட்டில் விளக்கேற்ற நல்ல மருமகளை எதிர்பார்த்து காத்திருக்கிறீர்களா... பண நெருக்கடிகளால் தொழில் முன்னேற்றம் தடைபடுகிறதா... உடனடியாக திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் கோயில் மாசிமகத் தெப்பத் திருவிழாவுக்கு கிளம்புங்கள். அங்கு குளத்தில் ஏற்றப்படும் விளக்கு ஒன்றை எடுத்து வந்து வீட்டில் வழிபடுங்கள். வாழ்வில் நல்ல திருப்பம் உருவாவதை உணர்வீர்கள். பிரம்மாவிடம் வரம் பெற்ற இரண்யன் மூன்று உலகங்களையும் அடிமைப்படுத்தினான். அவனது அட்டூழியம் அதிகரித்தது. அவனை அழிப்பதற்காக பூலோகத்தில் கதம்ப மகரிஷியின் ஆஸ்ரமத்தில் தேவர்கள் ஆலோசித்தனர். அந்தக் கூட்டத்திற்கு பிரம்மா, விஷ்ணு, சிவன் தலைமையில் சப்தரிஷிகள் கோஷ்டியாக வந்தனர். இதனால் அந்த இடம் 'திருக்கோஷ்டியூர்' எனப் பெயர் பெற்றது. இங்கு சவுமிய நாராயணப் பெருமாளுக்கு கோயில் உள்ளது. திருமணத்தடை, குழந்தைப் பேறு, பிரிந்த தம்பதி சேர்தல், வீடு கட்டுதல், நகை வாங்குதல், நோய் குணமாதல், மனக்கவலை தீருதல் என நம் கோரிக்கை நிறைவேற தெப்பத்திருவிழாவன்று குளக்கரையில் பக்தர்கள் ஏற்றிய தீபத்தை, வீட்டுக்கு எடுத்து வர வேண்டும். அதை பூஜையறையில் வைத்து தினமும் வழிபட வேண்டும். கோரிக்கை நிறைவேறியதும், அந்த விளக்கோடு புதிய விளக்கு ஒன்றையும் அடுத்த மாசி மக விழாவில் குளக்கரையில் ஏற்ற வேண்டும். இந்த இரண்டு விளக்கும் மற்றவருக்குப் பயன்படும். கோரிக்கை நிறைவேறுவதோடு, மற்றவர் கோரிக்கையும் நிறைவேறுவதால் புண்ணியமும் சேரும். நமக்கு கிடைத்தது பிறருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நல்ல கருத்து உணர்த்தப்படுகிறது. இங்கு வசித்த திருக்கோஷ்டியூர் நம்பியிடம் உபதேசம் பெற்ற ராமானுஜர், கோபுரத்தின் மீது ஏறி அதனை ஊரறியச் சொல்ல, இதனை நம்பி கண்டித்தார்.''குருவே! நான் ஒருவன் நரகம் போனாலும், ஊரார் சொர்க்கம் போவார்களே!'' என ராமனுஜர் சொன்னார். இங்கு ராமானுஜருக்கு சிலை உள்ளது. இங்குள்ள கருவறையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சவுமிய நாராயணர், அரக்கர்களான மது, கைடபர், இந்திரன், புரூருப சக்கரவர்த்தி, கதம்ப மகரிஷி, சந்தான கிருஷ்ணர், பிரம்மா, சரஸ்வதி, சாவித்திரி உள்ளனர். இதற்கு எதிரே திருமாமகள் என்னும் பெயரில் தாயாருக்கு தனி சன்னதி உள்ளது. இரண்ய வதம் நிகழும் வரை இங்கு தங்கிய இந்திரன், தேவலோகத்தில் தான் பூஜித்த சவுமிய நாராயணர் சிலையை இங்கு வைத்து வழிபட்டான். அதுவே உற்ஸவராக உள்ளது. இங்குள்ள மகாமக கிணற்றின் முன்பு 12ஆண்டுக்கு ஒருமுறை மகாமகத்தன்று கருட வாகன சேவை நடக்கும். கோயிலின் கீழ்தளத்தில் நர்த்தன கிருஷ்ணர், முதல் தளத்தில் சவுமிய நாராயணர், இரண்டாம் தளத்தில் உபேந்திர நாராயணர், மூன்றாம் தளத்தில் பரமபதநாதர் என நான்கு கோலத்தில் சுவாமியை தரிசிக்கலாம். நான்கு தளத்துடன் இருப்பதால் இக்கோயிலை மாடக்கோயில் என்பர்.எப்படி செல்வது: மதுரையிலிருந்து 62 கி.மீ., துாரத்தில் திருப்புத்துார். இங்கிருந்து 8 கி.மீ.,விசேஷ நாள்: நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி மாசி மகம்நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 4:00 - 8:00 மணி தொடர்புக்கு: 94862 32362, 04577 - 261 122 அருகிலுள்ள தலம்: திருப்புத்துார் திருத்தளிநாத சுவாமி கோயில் 8 கி.மீ.,நேரம்: காலை 5:30 - 12:30 மணி; மாலை 3:30 - 8:30 மணி தொடர்புக்கு: 94420 47593