மனிதன் எதையோ பேசட்டுமே! மனசை பாத்துக்க நல்லபடி...
* பிறர் உங்களைப் பற்றி என்ன சொன்னாலும், நினைத்தாலும் கவலைப்படாதீர்கள். பிறரைப் பற்றி நீங்களும் சிந்திக்கக் கூடாது. உங்கள் மனதுக்கு நீங்கள் நல்லவராக இருந்தால் போதும்.* பிறருக்கு இயன்ற உதவி செய்யுங்கள். மற்றவர் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். உத்தமர்களின் வரிசையில் உங்களை முதலிடம் பெறச் செய்வது கடவுளின் பொறுப்பு.* அன்றாடம் அரை நிமிட நேரம் ஒதுக்கி, நீங்கள் மனத்தூய்மை கொண்டவரா என்பதை உங்களை நீங்களே கேட்டுப் பாருங்கள். தவறுகளைத் திருத்திக் கொள்ள இது உதவியாக இருக்கும்.* தர்மத்தின் வழியில் மட்டும் செல்லுங்கள். அது ஒன்றே நல்வாழ்வுக்கு துணைநிற்கும். உலக ஆசைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள். அவை நம்மை பாவத்தில் தள்ளி விடும்.* கணவருக்கு பணிவிடை செய்வதைத் தவிர வேறெதையும் பதிவிரதை எண்ண மாட்டாள். அதுபோல கடவுளைச் சரணடைந்த பக்தன் அவரைத் தவிர வேறொன்றை சிந்திக்க மாட்டான்.* சிந்திக்கும் ஆற்றல் மனிதனுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. அதனால் நன்றியுடன் கடவுளை வழிபடாமல் போனால், மனிதன் விலங்கு நிலைக்கு தாழ்ந்து விடுவான்.* தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் உழைப்பில் ஈடுபட்டால் கடவுளின் அருள் துணை நிற்கும். அவன் வாழ்வில் எல்லா மேன்மைகளையும் அடைவான். * ஒழுக்கம் மனிதனின் உயிருக்குச் சமம். படிப்பு, பணம், புகழ் என அனைத்து செல்வங்களைப் பெற்றிருந்தாலும் ஒழுக்கம் இல்லாவிட்டால் அவற்றால் பயனில்லை.* நதி வழியே ஓடும் தண்ணீர் கடலைச் சென்றடைவது போல, உலகிலுள்ள அனைத்து உயிர்களும் என்றாவது ஒருநாள் கடவுளைச் சென்று சேர்வது உறுதி.* மருத்துவர் அறுவை சிகிச்சை செய்வதன் நோக்கம் உடல்நலனைக் காப்பது தான். அது போல, கடவுளால் கொடுக்கப்படும் சோதனை அனுபவங்களும் நம்மைப் பண்படுத்துவதற்கான முயற்சியே.* உண்பதற்காக உலகில் வாழ்வது கூடாது. நாவை முதலில் கட்டுப்படுத்துங்கள். எல்லாம் தானாகவே அடங்கி விடும்.* உள்ளத்தில் கர்வம் இருந்தால் சொல்லும், செயலும் முரண்படும். அடக்கம் இருந்தால் சொல்லும், செயலும் ஒன்றுபடும்.* கடவுள் சிந்தனையோடு உணவை உட்கொள்ள வேண்டும். இதைப் பின்பற்றினால் சாப்பிடும் அனைத்தும் அவருக்குப் படைக்கப்பட்ட பிரசாதமாகி விடும். * சிறிதும் அகந்தை வேண்டாம். பணியாளனைப் போல கடமையாற்றுங்கள். கடவுளின் அருளால் எல்லாம் நன்மையாகவே நடக்கும்.* வாழ்நாள் விரைந்து ஓடிக் கொண்டிருக்கிறது. காலம் மதிப்பு மிக்கது. எப்போதும் நல்ல பணிகளில் ஈடுபட்டு வாழ்வைப் பயனுள்ளதாக்குங்கள். * சத்திரத்தில் சிலநாள் தங்குவது போல, மனிதனுக்கு உலக வாழ்வு என்பது சில காலம் மட்டுமே. சத்திரத்திற்கு உரிமையாளன் ஒருவன் இருப்பது போல, உலகிற்கு கடவுளே உரிமையாளர்.சொல்கிறார் சாந்தானந்தர்