நோய்நொடி இல்லாமல் வளர்க!
கேரளாவிலுள்ள ஆலப்புழா மாவட்டம் மருத்தோர் வட்டம் சேர்த்தலாவில் தன்வந்திரி கோயில் உள்ளது. இங்கு வழிபட்டால் நோய்நொடி இல்லாத நல்வாழ்வு அமையும். வயலார் கிராமத்தைச் சேர்ந்த தம்பான் இனத்தை சேர்ந்த ஒருவர், நீண்ட காலமாக வயிற்று வலியால் அவதிப்பட்டார். வைக்கத்திலுள்ள வைக்கத்தப்பன் சுவாமியிடம் முறையிட்டார். வலி குறைந்தது. அன்றிரவு கனவில் தோன்றிய சிவன், ''பக்தனே! இத்தலத்தை விட்டு சென்றால் மறுபடியும் வலி ஏற்படும், சேர்த்தலைக்கு செல்! அங்குள்ள கேளம் குளத்தில் முழ்கு. நீருக்கடியில் மூன்று சிலைகள் கிடைக்கும். முதலில் கிடைக்கும் சிலை சக்தி வாய்ந்ததால் குளத்திலேயே விட்டு விடு, இரண்டாவது சிலையை அந்தணருக்கு தானம் கொடு. மூன்றாவது சிலையை பிரதிஷ்டை செய், அப்போது நோய் தீரப் பெறுவாய்'' என்றார். அதன்படி இரண்டாவது சிலையை வெள்ளுடு என்னும் பகுதியை சேர்ந்த நம்பூதிரிக்கு தானமளித்தார். அவர் அதை தன் வீட்டிலேயே வைத்து வழிபட்டார். சில ஆண்டுகளுக்கு பிறகு மண்மூசு என்பவரின் உதவியுடன் பிரதிஷ்டை செய்து கோயில் கட்டினார். இரண்டு குடும்பத்தினரும் நிர்வகித்தனர். பிற்காலத்தில் கோயில் யாருக்கு சொந்தம் என்ற பிரச்னை எழுந்தது. இதில் மண்மூசு குடும்பத்தினர் சிலையின் கையை உடைத்தனர். நம்பூதிரியின் குடும்பத்தினர் கை உடைந்த சிலையை மருத்தோர் வட்டத்தில் பிரதிஷ்டை செய்தனர். உடைந்த கையை வெள்ளியினால் செய்து பொருத்தினர். இங்கு சுவாமி மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார். அக்காலத்தில் காயமடைந்தவர்களுக்கு அட்டைப்பூச்சியை வைத்து சிகிச்சை செய்யும் முறை இருந்தது. இதனால் சுவாமியின் இடது கையில் வெள்ளியால் ஆன அட்டைப்பூச்சி உள்ளது. இக்கோயிலில் முக்குடி என்னும் மருந்தை தயிரில் கலந்து தயாரிக்கின்றனர். பூஜையின் போது மருந்து சுவாமியின் கையிலுள்ள தங்கக் குடத்தில் வைக்கப்படும். இதைப் பருகினால் நோய்கள் விலகும். குணம் அடைந்தவர்கள் சுவாமிக்கு வெண்ணெய், சந்தனக்காப்பும் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். ஆஸ்துமா, வாத நோய் தீரவும், நினைத்தது நிறைவேறவும் 'கயற்றேல் வானம்' என்னும் பூஜை நடத்துகின்றனர். அமாவாசையன்று நடக்கும் பிதுர் வழிபாட்டில் காட்டு சேப்பங்கிழங்கில் தயாராகும் தாள்கறி நிவேதனம் செய்வர். இந்த கிழங்கை தொட்டவருக்கு கையில் அரிப்பு ஏற்படும். அப்படிப்பட்ட இக்கிழங்குடன் மூலிகைகளைச் சேர்த்து தயாரிக்கும் மருந்து பூஜையில் இடம்பெறும். இதைச் சாப்பிட நீண்டகால நோயும் தீரும்.எப்படி செல்வது: எர்ணாகுளத்திலிருந்து சேர்த்தலா 40 கி.மீ., அங்கிருந்து 2 கி.மீ., விசேஷ நாட்கள்: ஆவணி திருவோணம், மாதந்தோறும் திருவோணத்தன்று பால் பாயாச வழிபாடு. சித்திரை உத்திரத்தன்று பிரதிஷ்டா தினம், ஐப்பசி தேய்பிறை துவாதசி தன்வந்திரி ஜெயந்திநேரம்: அதிகாலை 5:00 - காலை 10.30 மணி; மாலை 5:00 - இரவு 8:00 மணிதொடர்புக்கு: 0478 - 282 2962; 92491 13355 அருகிலுள்ள தலம்: வைக்கம் மகாதேவர் கோயில் 24கி.மீ.,