உள்ளூர் செய்திகள்

மணவாழ்வு தரும் மகாதேவர்

கேரளாவின் திருச்சூர் அருகிலுள்ள பெருவனம் இரட்டையப்பன் கோயிலில் அருள்புரியும் மகாதேவரை தரிசித்தால் விரைவில் நல்ல மணவாழ்வு அமையும்.தல வரலாறு: ஒருகாலத்தில் வனமாக இருந்த இப்பகுதியில், பூருமகரிஷி சிவனை நோக்கி தவமிருந்தார். அது கண்டு மகிழ்ந்த சிவன், அம்பிகையுடன் அர்த்தநாரீஸ்வர கோலத்தில் காட்சியளித்து, சிவலிங்கம் ஒன்றை கொடுத்தார். அந்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய விரல்களால் மூன்று கோடு போட்டு ஒரு குளத்தையும் உருவாக்கினார். அது 'தொடுகுளம்' எனப்பட்டது. குளத்தில் நீர் வற்றும் போது மூன்று கோடு இருப்பதைக் காணலாம்ஒருமுறை மகரிஷி தீர்த்தத்தில் நீராடச் செல்லும் போது லிங்கத்தை அருகிலுள்ள ஆலமரத்தின் மீது வைத்தார். திரும்பி வந்த போது லிங்கத்தை எடுக்க முடியவில்லை. அதன்பின் 24 படிகள் அமைத்து அதன் மீதேறி சிவனை பூஜித்தார். இப்போதும் இந்தப் படிகளில் ஏறியே மூலவரை தரிசிக்க முடியும். பூருமகரிஷி தவம் செய்ததால் இத்தலம் 'பூரு வனம்' என அழைக்கப்பட்டு, காலப்போக்கில் 'பெருவனம்' என்றானது.இரட்டையப்பன்: இங்கு இரு சிவலிங்கங்கள் இருப்பதால் 'இரட்டையப்பன் கோயில்' என அழைக்கின்றனர். சிவனுக்கு 'மகாதேவர்' என்றும் பெயருண்டு. அம்பிகையின் உருவத்தை சிறு லிங்கத்திற்குள் இருப்பது போல செதுக்கி ஐக்கியப்படுத்தி உள்ளனர். லிங்கங்களின் எதிரில் நந்தி, பலிபீடம் உள்ளது. மற்றொரு சன்னதியில் மகரிஷிக்கு காட்சி தந்த அர்த்தநாரீஸ்வரர் இருக்கிறார். இதன் பின்புறம் பார்வதி சன்னதி உள்ளது. பிரகாரத்தில் கணபதி, தட்சிணாமூர்த்தி, கோசால கிருஷ்ணன் சன்னதிகள் உள்ளன. கோயிலின் வடக்கே அகமலா சாஸ்தா, தெற்கே வழுத்துகாவு சாஸ்தா, கிழக்கே குதிரான்மலா சாஸ்தா, மேற்கே எடத்திருத்தி சாஸ்தா காவல் புரிகின்றனர். இங்கு 1440 ஆண்டுகளாக பூரம் திருவிழா நடப்பது குறிப்பிடத்தக்கது. சுற்றுக்கோயில்கள்: இரட்டையப்பன் கோயிலை சுற்றி 24 கோயில்கள் உள்ளன. திருப்பறையார் ராமர், சேர்ப்பு பகவதி(பூமாதேவி), ஊரகத்தம்மா திருவடி (லட்சுமி), ஆறாட்டுப்புழா சாஸ்தா, சாத்தன் குடம் சாஸ்தா, தொட்டிப்பால் பகவதி, அந்திக்காடு பகவதி, சுரக்கோடு பகவதி, நெட்டிசேரி சாஸ்தா, மாட்டில் சாஸ்தா, அயக்குன்னு பகவதி, கடலாசேரி பிசாரிக்கல் பகவதி, கோடனுார் சாஸ்தா, நாங்குளம் சாஸ்தா, எடக்குன்னி பகவதி, கங்குளங்கரை சாஸ்தா, தைக்காட்டுசேரி பகவதி, சிட்டிசாத்துகுடம் சாஸ்தா, மேடங்குளங்கரை சாஸ்தா, கல்லேறி சாஸ்தா, கொடுகரை புனிலார்காவு பகவதி, கடுப்புசேரி பகவதி, சாலக்குடி பிசாரிக்கல் பகவதி, திருவல்லகாவு சாஸ்தா ஆகியவை. இந்த கோயில்களில் திருவிழா துவங்கும் முன் பெருவனம் மகாதேவர் கோயிலில் அனுமதி பெற்றுச் செல்வர். வழிபாடு: திருமணத் தடை விலகவும், பிரிந்த கணவன், மனைவி ஒன்று சேரவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், முன்னோர் ஆன்மா சாந்தியடையவும், ஆயுள்விருத்திக்கும் பக்தர்கள் சிறப்பு பூஜை செய்கின்றனர்.தொழில், வியாபார வளர்ச்சி, கல்வி முன்னேற்றம் பெற சங்காபிஷேகம் செய்யப்படுகிறது. 60, 70, 80 வயது நிறைவடைந்த தம்பதியர் மிருத்யுஞ்ஜய ஹோமம், ஆயுள் ஹோமம் நடத்துகின்றனர்.எப்படி செல்வது: திருச்சூர் - திருப்பறையார் செல்லும் வழியில் 12 கி.மீ.,விசேஷ நாட்கள்: மாசி உத்திரத்தில் கொடியேறி பங்குனி உத்திரம் வரை பிரம்மோற்ஸவம், மகாசிவராத்திரி, திருக்கார்த்திகை. நேரம்: அதிகாலை 5:00 - 10:30 மணி; மாலை 5:00 - 08:00 மணிதொடர்புக்கு: 0487 - 234 8109அருகிலுள்ள தலம்: திருப்பறையார் ராமசுவாமி கோயில்