முன்வினை நீக்கும் ரிஷிபுரீஸ்வரர்
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் ரிஷிபுரீஸ்வரர் கோயில் ரிஷப, மிதுன, சிம்ம ராசியினருக்கு பரிகாரத்தலமாக உள்ளது. முன்வினைகளை நீக்கும் தலம் இது.தல வரலாறு: திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் தோன்றுவதற்கு முன்பே இந்த கோயில் தோன்றியதாகக் கூறுகின்றனர். பரத்வாஜர், காஷ்யபர், கவுதமர், அகத்தியர், ரோமசர் ஆகிய முனிவர்கள் சிவனை பூஜித்து ஞானம் பெறுவதற்காக வில்வக் காடுகள் நிறைந்த இந்த இடத்தில் தவம் மேற்கொண்டனர். அவர்களுக்கு அருள்புரிவதற்காக சிவனும், அம்பாளும் அவர்கள் முன் தோன்றி ஞானம் அளித்தனர். எனவே சுவாமிக்கு ரிஷிபுரீஸ்வரர் என்றும், அம்பாளுக்கு ஞானாம்பிகை என்றும் பெயர் வந்தது.சிறப்பம்சம்: இங்குள்ள நந்திதேவர் மிகவும் விசேஷமானவர். அவரது செவிகளில் இருந்து சிறு திரவப்பொருள் எப்பொழுதும் கசிந்து கொண்டு இருப்பது அதிசயம். இதற்குரிய காரணம் தெரியவில்லை. பரத்வாஜ, காசிப, கவுசிக கோத்ரத்தை சேர்ந்தவர்கள் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு. இத்தலம் மருதமரம் நிறைந்த மத்தியார்ஜுனக் காடாகும். வடக்கே மல்லிகார்ஜுனம் எனப்படும் ஸ்ரீசைலம், தெற்கே புடார்ஜுனம் எனப்படும் திருப்புடைமருதூர் (திருநெல்வேலி மாவட்டம்) இவற்றின் நடுவே உள்ளதால் இது மத்தியார்ஜுனம் எனப்பட்டது. ரிஷப, மிதுன, சிம்மராசிக்காரர்களுக்கு சிறந்த பரிகார ஸ்தலம். இக்@காயில் சிதிலமடைந்துள்ளதால் திருப்பணி நடந்து வருகிறது. ரிஷபராசி விநாயகர்: விநாயகர் மிகவும் அழகான ரூபத்துடன் காட்சி அளிக்கிறார். ரிஷப ராசிக்காரர்கள் ஐந்து வெள்ளிக்கிழமைகளில், ஒவ்வொரு வெள்ளியன்றும் நான்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை. இந்த விநாயகர் 'ரிஷபராசி விநாயகர்' என அழைக்கப்படுகிறார்.ரிஷிபுரீஸ்வரர்: ரிஷிபுரீஸ்வரர் லிங்கவடிவில் உள்ளார். திருவாதிரை, ரோகிணி நட்சத்திரக்காரர்கள் (மிதுன ராசி) அந்தந்த நட்சத்திர தினத்தில் இவரை வழிபட்டால் எல்லா நலமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஞானாம்பிகை அம்மன் மிக அழகாக,சிறிய உருவத்துடன் காட்சி அளிக்கிறாள். மகம் நட்சத்திரத்தினர் (சிம்மராசி) இந்த அம்மனை வழிபட நினைத்த காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை.குபேரன் மகாலட்சுமி சன்னதி: மிகவும் அரிதான மகாலட்சுமி, குபேரன் சன்னதி வடக்குதிசை நோக்கி அமைந்துள்ளது. வடக்கு பார்த்த குபேரனை வழிபட கடன் தொல்லை நீங்கும், வியாபார அபிவிருத்தி மற்றும் அஷ்ட ஐஸ்வர்யமும் கிட்டும். பைரவர் மிகவும் சக்தி வாய்ந்தவர். இவரை திங்கள் கிழமைகளில் நான்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவது நன்மை தரும்.திறக்கும் நேரம்: காலை 6- 10 மணி, மாலை 5- இரவு 8 மணி. இருப்பிடம்: கும்பகோணம்- மயிலாடுதுறை சாலையில் 9 கி.மீ., தூரம். மகாலிங்க சுவாமி கோயில் மேலவீதியில் கோயில் உள்ளது. போன்: 98400 53289