காலம் பொன்னானது கடமை கண்ணானது
* இழந்த பணத்தை மீண்டும் சம்பாதிக்க முடியும். ஆனால், இழந்த நேரத்தை மீண்டும் பெற முடியாது. கிடைக்கும் நேரத்தில் உங்கள் கடமையை சரி வர செய்யுங்கள்.* மண்ணில் நட்ட விதை பயிராக வளரும் என்ற நம்பிக்கை இருப்பது போல, கடவுளையும் நம்பிக்கையுடன் வணங்கினால் எதிர்கால வாழ்வு நன்மையாக அமையும்.* பிறரை வணங்குவதை பலவீனம் எனக் கருத வேண்டாம். பிறரை வணங்குவதன் பயனாக, நம் ஆணவ எண்ணம் குறையும்.* கருவறையில் கடவுளைக் காண்பதால் பயனில்லை. எல்லா உயிர்களிடமும் கடவுளைக் காண்பதே உண்மையான பக்தி.* சுயநலத்துடன் பக்தி செலுத்துபவரைக் கண்டால், கடவுள் ஆயிரம் அடி விலகிச் சென்று விடுவார்.* கிணற்றில் விழ ஒரு நிமிடம் கூடத் தேவையில்லை. ஆனால், அங்கிருந்து எழுந்து வர பல மணி நேரம் போராட வேண்டியிருக்கும். ஆக்கத்திற்கும், அழிவிற்கும் உள்ள வேறுபாடு இதுவே.* பாயும் நீரை ஓரிடத்தில் அணையில் தேக்கினால் விவசாயம் செய்யலாம். அது போல சிதறும் மனதை ஒருமுகப்படுத்தினால் கடவுளின் அருளைப் பெறலாம்.* நமது வாழ்வை ஆக்கவழியில் பயன்படுத்தாமல், அழிவு வழியில் பயன்படுத்தினால் ஏற்படும் துன்பத்திற்கு கடவுள் பொறுப்பாக மாட்டார்.* இன்றைய நண்பன் நாளை எதிரியாகலாம். நம்பிக்கைக்குரியவரும், அடைக்கலம் என வந்தவரைக் காக்கும் ஒரே நண்பன் கடவுள் மட்டுமே. * சாஸ்திரத்தை படிப்பதால் பயனில்லை. அதைப் பின்பற்ற வேண்டும். வீட்டைக் கட்டாமல், வெறும் கட்டட வரைபடத்தில் யாரும் குடியிருக்க முடியாது. * ஆரம்பத்தில் கடவுள் மீது பயபக்தி இருக்க வேண்டும். காலம் செல்லச் செல்ல பயம் மறைந்து விடும். பக்தி மட்டும் நிலைக்கும்.* புயலில் மரம் சாயும். கட்டடங்கள் இடிந்து போகும். ஆனால், புல் வளைந்து கொடுத்து தப்பித்துக் கொள்ளும். இந்தப்பணிவை புல்லிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள்.* கரும்பின் சாற்றை உறிஞ்சி விட்டு சக்கையை எறிவது போல, நண்பர்களிடம் உள்ள நல்லதை எடுத்துக் கொண்டு தீமையைத் தள்ளி விடுங்கள். * வரைபடம் இருப்பவனுக்கு வாகனப் பயணம் சுலபமாகும். தர்ம சாஸ்திரங்களின் உதவி இருந்தால் வாழ்க்கைப் பயணம் எளிதாகும்.* கடவுளின் பெயரைச் சொன்னாலும், கேட்டாலும் பாவம் தொலையும். மனம் சுத்தமாகும். வலை பின்னும் சிலந்தி போல எங்கிருந்தாலும் மனதால் கடவுளின் திருநாமத்தை ஜெபியுங்கள்.* பிறர் மீதுள்ள குறைகளை பொருட்படுத்தாமல் அவரிடமுள்ள நற்குணங்களை மட்டும் காண முயல வேண்டும்.சொல்கிறார் அமிர்தானந்தமயி