இரட்டையப்பன்
லிங்கத்திற்குள் பார்வதிதேவி இருக்கும் அரிய லிங்கத்தைக் காண வேண்டுமானால், கேரளா, திருச்சூர் அருகிலுள்ள பெருவனம் இரட்டையப்பன் (மகாதேவர்) கோயிலுக்குச் செல்ல வேண்டும்.தல வரலாறு: ஒருகாலத்தில் வனமாக இருந்த இப்பகுதியில், பூரு மகரிஷி சிவனை நோக்கி கடும் தவம் இருந்தார். தவத்திற்கு மகிழ்ந்த சிவன் பார்வதி சமேதராக அர்த்தநாரீஸ்வர கோலத்தில் காட்சி தந்து, அவரிடம் லிங்கம் ஒன்றை கொடுத்தார். அந்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய விரல்களால் மூன்றுகோடு போட்டு ஒரு குளத்தை உருவாக்கினார். அது 'தொடுகுளம்' எனப்பட்டது. (குளத்தில் நீர் வற்றும் போது அதனுள் மூன்று கோடுகளை இப்போதும் காணலாம்) ஒருமுறை மகரிஷி இந்த தீர்த்தத்தில் நீராடச் செல்லும் போது சிவலிங்கத்தை அருகிலிருந்த ஒரு ஆலமரத்தின் மேல் வைத்து சென்றார். திரும்ப வந்து லிங்கத்தை எடுத்த போது லிங்கம் வரவில்லை. எனவே 24 படிகள் அமைத்து அதன் மீது ஏறி லிங்கத்தை பூஜித்து வந்தார். இந்தப் படிகளில் ஏறிச்சென்றே மூலவரை தரிசிக்க முடியும். பூரு மகரிஷி தவம் செய்ததால் இத்தலம் 'பூரு வனம்' என அழைக்கப்பட்டு, காலப்போக்கில் 'பெருவனம்' ஆனது.தல சிறப்பு: இங்கு சிவபெருமான் 'மகாதேவர்' என்ற திருநாமம் பெற்றுள்ளார். மற்றொரு சந்நிதியில் மகரிஷிக்கு காட்சி தந்த அர்த்தநாரீஸ்வர திருக்கோலம் உள்ளது. லிங்கத்திற்குள் பார்வதி இருப்பது இங்கு மட்டும் தான். பார்வதியின் உருவத்தை சிறுலிங்கத்திற்குள் இருப்பது போல செதுக்கி, லிங்கத்திற்குள் ஐக்கியப்படுத்தி உள்ளனர். இத்தலத்தில் 1430 ஆண்டுகளாக பூரம் திருவிழா நடந்து வருகிறது. புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா கூட சுமார் 200 ஆண்டுகளாகத்தான் நடக்கிறது. அதற்கெல்லாம் பல நூறு ஆண்டுகள் முன்பே இங்கு பூரம் திருவிழா நடந்து வருகிறது.சுற்றுக்கோயில்கள்: இரட்டையப்பன் கோயிலை சுற்றி 24 கோயில்கள் இருக்கின்றன. அவை: திருப்பறையார் ராமர், சேர்ப்பு பகவதி(பூமாதேவி), ஊரகத்தம்மா திருவடி (லட்சுமி), ஆறாட்டுப்புழா சாஸ்தா, சாத்தன்குடம் சாஸ்தா, தொட்டிப்பால் பகவதி, அந்திக்காடு பகவதி, சுரக்கோடு பகவதி, நெட்டிசேரி சாஸ்தா, மாட்டில் சாஸ்தா, அயக்குன்னு பகவதி, கடலாசேரி பிசாரிக்கல் பகவதி, கோடனூர் சாஸ்தா, நாங்குளம் சாஸ்தா, எடக்குன்னி பகவதி, கங்குளங்கரை சாஸ்தா, தைக்காட்டுசேரி பகவதி, சிட்டிசாத்துகுடம் சாஸ்தா, மேடங்குளங்கரை சாஸ்தா, கல்லேறி சாஸ்தா, கொடுகரை புனிலார்காவு பகவதி, கடுப்புசேரி பகவதி, சாலக்குடி பிசாரிக்கல் பகவதி, திருவல்லகாவு சாஸ்தா ஆகியவை. இந்த கோயில்களில் திருவிழா துவங்கும் முன், அவற்றின் நிர்வாகிகள், பெருவனம் கோயிலுக்கு வந்து சிவனிடம் அனுமதி கேட்டு பூஜை செய்த பின்னரே விழாவை துவக்குவர்.வழிபாடு: பிரிந்த கணவன், மனைவி ஒன்று சேரவும், குழந்தை பாக்கியத்துக்கும், முன்னோர் ஆன்மா சாந்தியடையவும், திருமணத்தடை விலகவும், ஆயுள்விருத்திக்கும் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. தொழில், வியாபாரம், புதிய திட்டங்கள் துவங்குதல், பணி ஆகியவற்றின் வெற்றிக்காவும், படிப்பில் சிறந்து விளங்கவும் சங்காபிஷேகம் செய்யப்படுகிறது. 60, 70, 80 வயது நிறைவடைந்த தம்பதியினர் மிருத்யுஞ்ஜய ஹோமம் செய்கிறார்கள்.கோயில் அமைப்பு: இங்கு இரண்டு சிவலிங்கங்கள் இருப்பதால் 'இரட்யைப்பன் கோயில்' என்கின்றனர். லிங்கங்களின் எதிரில் நந்தி, பலிபீடம் உள்ளது. அர்த்தநாரீஸ்வரர் சந்நிதியின் பின்புறம் பார்வதி சந்நிதி இருக்கிறது. கணபதி, தட்சிணாமூர்த்தி, கோசால கிருஷ்ணன் சந்நிதிகளும் உள்ளன. கோயிலின் வடக்கே அகமலா சாஸ்தா, தெற்கே வழுத்துகாவு சாஸ்தா, கிழக்கே குதிரான்மலா சாஸ்தா, மேற்கே எடத்திருத்தி சாஸ்தா காவல் செய்கின்றனர்.திருவிழா: மாசி உத்திரத்தில் கொடியேறி பங்குனி உத்திரம் வரை பிரம்மோற்ஸவம், மகா சிவராத்திரி, திருக்கார்த்திகை.திறக்கும் நேரம்: காலை 5- 10.30 மணி, மாலை 5- 8 மணி.இருப்பிடம்: திருச்சூரிலிருந்து திருப்பறையார் செல்லும் வழியில் 12 கி.மீ. தூரத்தில் பெருவனம்.போன்: 0487- 234 8109