வியாழனன்று வணங்குங்க! விவாகம் பண்ணுங்க!
சிவன் குருவாக இருந்து அருளும் தலம் திருத்தளூர். சுந்தரருக்கு உபதேசம் செய்த இவர் சிஷ்டகுருநாதராக இங்கு வீற்றிருக்கிறார். வியாழனன்று வழிபட்டால் தடைபட்ட திருமணம் விரைவில் நடந்தேறும்.தல வரலாறு:கயிலாயத்தில் சிவபார்வதி திருமணம் நடந்தபோது, அகத்தியர் தென்திசை வந்தார். வழியில் பல இடங்களில் லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தார். திருத்தளூர் வந்தபோது திருமணத்தை காணும் எண்ணம் ஏற்பட்டது. இறைவனும் மணக்கோலத்தில் காட்சியளித்து அருள்புரிந்தார். அகத்தியர் சிவனை மேற்கு நோக்கியும், அம்பாளை வடக்கு நோக்கியும் வைத்து வழிபட்டார். அவளது திருமணம் வட திசையில் உள்ள கயிலாய மலையில் நடந்ததால் இப்படி செய்தார். அம்பாளை வடக்கு நோக்கி காண்பது அபூர்வம். கிழக்கு அல்லது தெற்கு நோக்கிய சந்நிதிகளே அதிகம். சுவாமி சிஷ்டகுருநாதர் என்றும், அம்பிகை சிவலோகநாயகி என்றும் அழைக்கப்படுகின்றனர். குரு தலம்:திருவெண்ணெய் நல்லூரில் சிவனை 'பித்தா' என்று பாடிய சுந்தரர், திருத்தளூர் புறப்பட்டார். தென்பெண்ணையாறு குறுக்கிடவே, கரையில் இருந்தே தேவாரம் பாடினார். அப்போது சிவபார்வதி வயதான தம்பதி வடிவில் வந்து, படகில் அவரை ஏற்றி மறு கரை சேர்த்தனர். அப்போது பெரியவர் மறைந்து கொண்டார். சுந்தரர் சுற்றிலும் தேடிப் பார்த்த போது அவர், 'நீங்கள் தேடுபவர் கோபுரத்தில் இருக்கிறார்,' என்று சொல்லி விட்டு மறைந்தார். சுந்தரருக்கு சிவபார்வதி ரிஷப வாகனத்தில் காட்சியளித்தனர். சுந்தரர் அவரிடம் உபதேசம் செய்யும்படி வேண்ட, இறைவனும் குருவாக இருந்து 'தவநெறி' உபதேசம் செய்தார். எனவே, 'தவநெறி ஆளுடையார்' என்ற பெயர் சுந்தரருக்கு ஏற்பட்டது. சுவாமி குரு அம்சமாகத் திகழ்வதால் வியாழனன்று விசேஷ வழிபாடு நடக்கிறது. அனுக்ஞை விநாயகர் தலவிநாயகராக வீற்றிருக்கிறார். நந்திக்கொடி:பிரதோஷபூஜையில் இங்கு நந்திக்கொடி கட்டுகின்றனர். சிவனுக்கு வாகனமான நந்திக்கு பிரதோஷ பூஜையில், நந்திக் கொடியைக் கட்டும் வழக்கம் அக்காலத்தில் இருந்தது. காலப்போக்கில் மறைந்து விட்டது. இலங்கையில் இப்பழக்கம் இன்றும் உண்டு. 7வாரம் நெய்தீபம்:கருவறையில் சிவன் லிங்க வடிவில் இருக்கிறார். ஆவுடை வலது பக்கமாக இருக்கிறது. பவுர்ணமி, திங்கள்கிழமையில் சிறப்பு பூஜை நடக்கிறது. திருமண, புத்திரதோஷம் உள்ளவர்கள் சிஷ்டகுருநாதருக்கும், தட்சிணா மூர்த்திக்கும் 7 வாரம் வியாழனன்று நெய்விளக்கு ஏற்றி, வில்வ அர்ச்சனை செய்கின்றனர். சித்திரை முதல் வாரம், மாலை வேளையில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. இங்கு முருகன் ஆறுமுகங்களுடன் சுப்பிரமணியராக இருக்கிறார். அருணகிரியார் இவரை, 'குருநாதர்' என்று திருப்புகழில் பாடியிருக்கிறார். ஆதிகேசவர் தெற்கு நோக்கி இருக்கிறார். இங்குள்ள சுந்தரர், இடது கையில் செங்கோலுடன் காட்சி தருகிறார். இவருக்கு தலைப்பாகை அணிவிக்கப்படுகிறது. முதியவர் சிவன்:கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி சந்நிதி அருகே சிவன், சுந்தரருக்கு காட்சியளித்த சிற்பம் உள்ளது. பிரகாரத்தில் பைரவர், சூரிய லிங்கம், ராமலிங்கம், பீமலிங்கம், சூரியன், ஆதிகேசவ பக்தவச்சலர், கஜலட்சுமி இருக்கின்றனர். நர்த்தன விநாயகர் கிழக்கு பார்த்து இருக்கிறார். கோயிலுக்கு எதிரே சுந்தரரை முதியவர் வடிவில் வந்து சிவன் தடுத்த இடத்தில் 'தடுத்தாட்கொண்டீஸ்வரர்' மற்றும் 'அஷ்டபுஜ காளி'க்கு சந்நிதிகள் உள்ளன. மெய்கண்ட நாயனாரின் சீடரான அருணந்தி சிவாச்சாரியார் அவதரித்ததும், முக்தி அடைந்ததும் இங்கு தான். இவருடைய ஜீவசமாதி இங்கிருக்கிறது. திருவிழா:வைகாசி விசாகத்தில் 10 நாள் பிரம்மோற்ஸவம், கந்தசஷ்டி, சிவராத்திரி, நவராத்திரிபூஜை நேரம்:காலை 6 - 12, மாலை 5 - 8.இருப்பிடம்:கடலூரில் இருந்து 24 கி.மீ., தூரத்தில் பண்ருட்டி. அங்கிருந்து 8 கி.மீ., போன்:94448 07393, 04142 248 498.ஏ. முரளி குருக்கள்