இது பைரவர் பிரசாதம்
UPDATED : ஜூலை 02, 2021 | ADDED : ஜூலை 02, 2021
ரமணரை தரிசிக்க வெளியூரில் இருந்து பக்தர் ஒருவர் திருவண்ணாமலைக்கு வந்தார். அவர் ரமணரின் முன் தாம்பாளம் ஒன்றில் அல்வாவை வைத்து வணங்கினார். நெய்யும், முந்திரியுமாக வாசனை மூக்கை துளைத்தது. அல்வாவையும், பக்தரையும் மாறி மாறி ரமணர் பார்த்தார். அப்போது அங்கு நாய் ஒன்று ஓடி வந்தது. அல்வாவைக் கண்டதும் வாலை ஆட்டிய படி மகிழ்ச்சியுடன் முகர்ந்தது. 'சீ! சீ!' என விரட்ட முயன்றார் பக்தர். ''பாவம்... விரட்ட வேண்டாம். அதுவும் கடவுளால் படைக்கப்பட்ட உயிர் தானே!'' என்றார் ரமணர். இதையே தனக்கு கிடைத்த உபதேசமாக கருதிய பக்தர் விலகினார். நாயும் அல்வாவை சிறிதளவு கவ்விக் கொண்டு ஓடியது. மீதி அல்வாவை 'பைரவர் பிரசாதம்' என சொல்லிய ரமணர் அனைவருக்கும் கொடுத்து விட்டு சாப்பிட்டார்.