உள்ளூர் செய்திகள்

தொட்டமளூர் கண்ணன்

பெங்களூரு- மைசூரு சாலையில் 50 கி.மீ., துாரத்திலுள்ள சென்னப்பட்டினம் அருகில் தொட்டமளூர் என்னும் தலம் உள்ளது. இங்குள்ள அப்ரமேயர் (பெருமாள்) கோயிலில் வியாசரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட நவநீதகிருஷ்ணர் உள்ளார். இங்கு இவரை தவழும் குழந்தை வடிவில் தரிசிக்கலாம். ஒருமுறை அருளாளரான புரந்தரதாசர் இங்கு வரும் போது கோயில் நடையை சாத்தி விட்டனர். சுவாமியைத் தரிசிக்க வேண்டும் என்ற ஆவலில் “ஜகத்தோத்தாரணா” என்னும் கீர்த்தனையை பாடினார். உடனே கதவுகள் திறந்து கொண்டதோடு, கிருஷ்ணர் காட்சியளித்தார். குழந்தை வரம் வேண்டி வருபவர்கள் இங்கு மரத்தொட்டில் கட்டுகின்றனர். இங்கு வெண்ணெய் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது.