தினமலர் செய்தி எதிரொலி பள்ளி கட்டடம் சீரமைப்பு
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், திருப்புலிவனம் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த, 850 மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.இங்கு, 20 ஆண்டுக்கு முன், வடக்கே பார்த்த நிலையில் பள்ளி கட்டடம் ஒன்று கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. தற்போது, இக்கட்டடம் சேதமடைந்து கான்கிரீட் பெயர்ந்து, இரும்பு கம்பிகள் வெளியே நீட்டிக் கொண்டு உள்ளன.மேலும், முதல் தளத்தில் உள்ள தூண்களும் சேதமடைந்து, எந்நேரமும் கட்டடம் இடிந்து மாணவர்கள் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.இது குறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, கட்டடத்தின் பழுது நீக்கப்பட்டு, முதல் தளத்தில் இருந்து மாணவர்கள் தவறி விழாதபடிக்கு, இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.