| ADDED : ஜன 11, 2024 11:38 PM
கோவை;நமது நாளிதழில் வெளியிட்ட செய்தியை தொடர்ந்து, சின்னியம்பாளையத்தில் அனுமதியின்றி வைத்திருந்த விளம்பர பலகைகள் நேற்று அகற்றப்பட்டன.கோவை மாவட்டத்தில் எந்தவொரு இடத்திலும் விளம்பர பலகைகள் வைக்க, மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் தரப்பில் அனுமதி தரப்படவில்லை. விளம்பர பலகைகள் அகற்றிய இடங்களில், இரும்பு சட்டங்கள் எடுக்காததால், அதிகாரிகள் கண்காணிப்பு இல்லாத சமயங்களில், இரவோடு இரவாக மீண்டும் விளம்பர பலகைகள் வைக்கப்படுகின்றன.சமீபத்தில் சின்னியம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியிலும், கருமத்தம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியிலும் அனுமதியின்றி மெகா சைஸ் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. இதுதொடர்பாக, 10ம் தேதி நமது நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. கலெக்டர் கிராந்திகுமார் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதும், அவற்றை உடனடியாக அகற்ற, உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தினார்.சின்னியம்பாளையத்தில் இரு இடங்களில் வைத்திருந்த விளம்பர பலகைகள் நேற்று உடனடியாக அகற்றப்பட்டன. இரும்பு சட்டங்களை அகற்ற, கட்டட உரிமையாளருக்கு நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டது.இதேபோல், கருமத்தம்பட்டி நகராட்சியில், பைபாஸ் இருபுறமும் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை, நகராட்சி கமிஷனர் நேரில் ஆய்வு செய்து, அகற்ற நடவடிக்கை எடுக்கப் போவதாக தெரிவித்தார்.