| ADDED : செப் 03, 2025 06:37 AM
திருவனந்தபுரம்; கேரளாவில் பிளஸ் 1 மாணவனுடன் ஓட்டம் பிடித்த, 27 வயது இளம்பெண்ணை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம், ஆலப்புழா அருகே சேர்த்தலா பள்ளிபுரத்தை சேர்ந்தவர் சனுஷா, 27; திருமணமாகாதவர். சில மாதங்களுக்கு முன் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். அப்போது குத்தியதோடு பகுதியை சேர்ந்த துாரத்து உறவினரான பிளஸ் 1 படிக்கும், 17 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் மொபைல் போனில் பேசி, பழகினர். இரு நாட்களுக்கு முன் இருவரும் வீட்டில் இருந்து மாயமாகினர். சிறுவனின் பெற்றோர், இளம் பெண்ணின் பெற்றோர் தனித்தனியாக போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்திய நிலையில், உறவினர் ஒருவருடன் சிறுவன், 'வாட்ஸாப்' அழைப்பில் பேசியுள்ளார். இதைத்தொடர்ந்து, அவர் கர்நாடக மாநிலம், கொல்லுாரில் இருப்பது தெரிந்தது. போலீசார் அங்கு சென்று, லாட்ஜில் தங்கி இருந்த இருவரையும் மீட்டு அழைத்து வந்தனர். சனுஷா மீது போலீசார் போக்கோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கொட்டாரக்கரை பெண்கள் சிறையில் அடைத்தனர். சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.