உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / காரைக்குடியில் 5 தலைமுறைகளை கண்ட 100 ஆண்டை தொட்ட பாரம்பரிய வீடு: குடும்பத்தினர் 300 பேர் கொண்டாட்டம்

காரைக்குடியில் 5 தலைமுறைகளை கண்ட 100 ஆண்டை தொட்ட பாரம்பரிய வீடு: குடும்பத்தினர் 300 பேர் கொண்டாட்டம்

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கோட்டையூர் ஊராட்சி வேலங்குடியில் மூதாதையர் செட்டிநாடு பாரம்பரிய முறைப்படி கட்டிய 100வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வீட்டை புதுப்பித்து 5 தலைமுறைகளைச் சேர்ந்த வாரிசுகள் 300 பேர் விழா எடுத்து கொண்டாடினர். கோட்டையூர் வேலங்குடியில் 1926ல் பெரியணன், அவரது தம்பி சுப்பையா, 'சின்னான்' வீடு என்ற பெயரில் செட்டிநாடு முறைப்படி இந்த வீட்டை கட்டினர். தற்போது 99 ஆண்டை நிறைவு செய்து, 100வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. வீட்டை பழமை மாறாமல் பராமரிக்கும் நோக்கில் குடும்பத்தை சேர்ந்தவர்கள் அப்படியே புதுப்பித்தனர். நேற்று இந்த வீட்டில் 100வது ஆண்டு பிறந்த நாளை கொண்டாடினர். 5 தலைமுறைகளைச் சேர்ந்த 64 குடும்ப உறவினர்கள் 300 பேர் பங்கேற்றனர். கனடா, மலேஷியா, சிங்கப்பூர் நாடுகளில் இருந்து வந்திருந்தனர். செட்டிநாட்டு பலகாரங்களுடன் விருந்து நடந்தது. மூத்த தலைமுறையினர் கேக் வெட்டினர். குடும்ப உறுப்பினர்கள் பாட்டு, பரதம் கலைநிகழ்ச்சிகளில் ஈடுபட்டனர். வீடு முன் போட்டோ எடுத்து கொண்டனர். குடும்பத்தினர் கூறியதாவது: தற்போது பலர் பண்பாடு, கலாசாரத்தில் இருந்து விலகி சென்று விட்டனர். நாங்கள் இந்த வீட்டை பாரம்பரியம் மாறாமல் காத்து வருகிறோம். அனைத்து குடும்ப உறுப்பினர்களும் இந்த வீட்டில் கூடி முக்கிய முடிவுகளை எடுப்போம். ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வதன் மூலமே குடும்ப உறவுகள் 5 தலைமுறைகள் வரை நீடிக்கிறது. இன்னும் இந்த உறவு பல தலைமுறைகளுக்கும் தொடரும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை