உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / பள்ளியை தரம் உயர்த்த 70 ஆண்டாக மறுப்பு: பார்வையற்ற மாணவர்கள் பரிதவிப்பு

பள்ளியை தரம் உயர்த்த 70 ஆண்டாக மறுப்பு: பார்வையற்ற மாணவர்கள் பரிதவிப்பு

சென்னை:சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும், பார்வையற்ற மாணவர்களுக்கான அரசு நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படாததால், 2024 - 2025ம் கல்வியாண்டில், எட்டாம் வகுப்பை நிறைவு செய்த மாணவர்கள், டி.சி., வாங்க மறுத்து வருகின்றனர். சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டை வட்டம், பங்களா தெருவில், பார்வையற்ற மாணவர்களுக்கான அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்பது, இங்கு படிக்கும் மாணவர்களின் நீண்ட கால கோரிக்கை.

அலட்சியம்

ஆனாலும், 70 ஆண்டுகளுக்கு மேலாக, இப்பள்ளி தரம் உயர்த்தப்படாமல் உள்ளது. இதனால், இங்கு எட்டாம் வகுப்பை நிறைவு செய்யும் பார்வையற்ற மாணவர்களில் பலர், உயர் வகுப்புகளில் சேருவதில்லை. அரசு விதிப்படி, பார்வை யற்றோர் பள்ளிகளில், 60 பேர் படித்தால், உயர்நிலை பள்ளியாகவும், 80 பேர் படித்தால் மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்த வேண்டும். ஆனால், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள், சேலம் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் செயல்படும், நடுநிலைப் பள்ளிகளை தரம் உயர்த்தாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், சேலம் அரசு பார்வையற்றோர் நடுநிலைப்பள்ளியில், கடந்த கல்வியாண்டில் எட்டாம் வகுப்பை நிறைவு செய்த மாணவர்கள், இதே பள்ளியில் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளை படிக்க வேண்டும் என்று கூறி, மாற்றுச் சான்றிதழான டி.சி., வாங்காமல் புறக்கணித்துள்ளனர். இதுகுறித்து, ஆசிரியர் கருப்பையா கூறியதாவது:பார்வையற்றோருக்கான நடுநிலைப் பள்ளியை, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதனால், ஆண்டுதோறும் எட்டாம் வகுப்பை நிறைவு செய்வோரில் பலர் உயர் வகுப்புகளில் சேருவதில்லை. சேலம் மாவட்டத்தில், கடந்த கல்வியாண்டில் எட்டாம் வகுப்பை நிறைவு செய்த, இரு மாணவியர் உட்பட, 14 மாணவர்கள், இதே பள்ளியில் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பை படிக்க விரும்புவதாகக் கூறி, டி.சி., வாங்காமல் புறக்கணித்து வருகின்றனர்.

விரும்புவதில்லை

தஞ்சை, திருச்சி, சென்னை மாவட்டங்களில், பார்வையற்ற மாணவர்களுக்கான அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. ஆனால், அதிக தொலைவு, திருச்சியில் பார்வையற்ற மாணவி மர்ம மரணம் உள்ளிட்ட காரணங்களால், அங்கு அனுப்ப, பெற்றோர் விரும்புவதில்லை. எனவே, இடைநிற்றலை கருத்தில் கொண்டு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ், இப்பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Bhaskaran
ஜூன் 02, 2025 18:37

இவர்களை மனம் நோக வைத்த கல் நெஞ்சம் படைத்த அதிகாரிகள் குடும்பத்தில் குழந்தைகள் மாற்று திறனாளிகளாக பிறப்பார்கள்


அப்பாவி
ஜூன் 02, 2025 13:38

காலை உணவா பொங்கல், வடை போடச் சொல்லிருக்கோம்.


c.mohanraj raj
ஜூன் 01, 2025 20:32

திராவிட மாடல் வீட்டுக்கு சென்றவுடன் செயல்படுத்தலாம்


Padmasridharan
ஜூன் 01, 2025 08:02

அதிகாரிகள் மாற்றுத்திறனாளிகளின் கல்வியிலும் விளையாட ஆரம்பித்துவிட்டார்கள். 21 வகை மாற்றுத்திறனாளிகளில் சிலருக்கு புதுப்புது கல்லூரிகளும் திறக்கப்படுகின்றன மூடவும் செயகின்றனர். இது என்னைக்கு வெளியில் வருமோ சாமி .


Ram
ஜூன் 01, 2025 07:33

உடனே அமைச்சர் ஒரு அறிக்கை விடுவார், இதனை அரசு அதிகாரிகள் இருக்கும்போதும் இதனைவருடமாக தரம் உயர்தாததை பற்றி ஒருத்தன்கூடவா அரசுக்கு சொல்லவில்லை, இவ்வளவு கல்நெஞ்சக்காரர்கள் நம் அரசில் இடம்பெற்றற்றிருப்பதால் நாட்டின் முன்னேற்றம் வெகுவாக பாதிக்கப்படுகிறது … முதலில் இந்த லஞ்சம் வாங்கும் முறை ஒழிக்கப்படவேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை