UPDATED : டிச 30, 2025 12:52 PM | ADDED : டிச 30, 2025 01:26 AM
பீஜிங்: சீனாவைச் சேர்ந்த சரக்கு கப்பல் ஒன்று இந்திய, அட்லாண்டிக் மற்றும் பசிபிக் என மூன்று பெருங்கடல்களை சுற்றி மூன்று மாதங்கள் பயணித்து கிரேன்களை 'டெலிவரி' செய்துள்ளது. நம் அண்டை நாடான சீனாவில் தயாரிக்கப்பட்ட கிரேன்கள், உலகின் பல துறைமுகங்களில் பயன் படுத்தப்படுகின்றன. இந்நிலையில், 'ஜென் ஹுவா 29' என்ற, 800 அடி நீளமுள்ள சரக்கு கப்பல் ஒன்று, அமெரிக்காவின் கல்ப் கோஸ்ட் மற்றும் வட அமெரிக்க நாடான ஜமைக்காவில் உள்ள துறைமுகங்களுக்கு கிரேன்களை கொண்டு சென்றது. வழக்கமாக ஷாங்காயிலிருந்து மிசிசிப்பி வரை பசிபிக் பெருங்கடலை கடந்து பனாமா கால்வாய் வழியாக சென்றால், ஒரு மாதத்தில் சென்றடையலாம். ஆனால், இந்தக் கப்பலில் ஏற்றப்பட்ட கிரேன்களின் 'பூம்ஸ்' எனப்படும் நீண்ட கைகள் கப்பலின் பக்கவாட்டில் வெளியே நீண்டு கொண்டிருந்ததால், பனாமா கால்வாய் அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். இதனால் கப்பல் ஆப்பிரிக்காவின் தென்கோடியில் உள்ள கேப் ஆப் குட் ஹோப் வழியாக சுற்றி, நீண்ட பாதையில் செல்ல வேண்டியிருந்தது. ஷாங்காயிலிருந்து ஜூன், 20ல் புறப்பட்ட கப்பல், மொசாம்பிக் கடற்கரையில் சுமார் இரண்டு வாரங்களும், தென்னாப்ரிக்க கடற்கரையில் ஒரு வாரமும் நங்கூரமிட்டு இருந்தது. பின்னர் ஆகஸ்ட் 14ல் ஆப்ரிக்காவைச் சுற்றிய கப்பல், செப்டம்பர் 11ல் மிசிசிப்பியின் கல்ப்போர்ட் துறைமுகத்தை அடைந்தது. பின்னர் டெக்சாஸ் மற்றும் ஜமைக்காவின் கிங்ஸ்டன் துறைமுகத்தில் கிரேன்களை இறக்கியது. மூன்று மாதங்களில், 37,000 கிலோமீட்டர் பயணித்து இந்திய, அட்லாண்டிக் மற்றும் பசிபிக் என மூன்று பெருங்கடல்களை கடந்து இந்த கிரேன்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளன. கிரேன்களை இறக்கிய பின் வெறுமனே திரும்பியதால், பனாமா கால்வாய் வழியாக குறுகிய பாதையில் ஷாங்காயை இந்த மாதம் வந்தடைந்தது.