உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / பா.ஜ.,வுக்கு நல்லதல்ல இது!

பா.ஜ.,வுக்கு நல்லதல்ல இது!

அ.சேகர், கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த 2014ல், 282 இடங்களில் தனியாக வெற்றி பெற்று, பா.ஜ., ஆட்சியில் அமர்ந்தது. அதைத் தொடர்ந்து, 2019ல், 303 இடங்களில் தனியாக வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது.இருந்த போதும், தன் கூட்டணி கட்சிகளுக்கும், தன் அமைச்சரவையில் இடம் கொடுத்தது. இந்த இரண்டு முறையும், பா.ஜ.,வின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில், மிகப் பெரிய ஊழல் குற்றச்சாட்டுக்கள் இல்லாததால், மீண்டும் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி தான் வெற்றி பெறும் என்று, பெரும்பாலான தேர்தல் கருத்துக் கணிப்புகள் கூறின.பா.ஜ.,வும் தனக்கு 400 இடங்கள் கிடைக்கும் என்று பேராசையோடு சுற்றித் திரிந்தது. ஆனால், பா.ஜ.,வுக்கு வெறும் 240 இடங்கள் மட்டுமே கிடைத்தது; சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் தயவில் தான் ஆட்சி அமைக்க முடிந்தது. இனி, அதிரடியாக எந்த புதிய சட்டத்தையும், முன்பு செய்ததைப் போல, சட்டென நிறைவேற்றி விட முடியாது.இது தான் இப்படி என்றால், நாடு முழுதும் நடந்து முடிந்த, 13 சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களில், இரண்டு இடங்களில் மட்டுமே பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்று உள்ளதும், 'இண்டியா' கூட்டணி கட்சிகள், 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதும், பா.ஜ.,வுக்கு நிச்சயம் பின்னடைவு தான்.இந்த ஆண்டு கடைசியில் வரவுள்ள, ஹரியானா மற்றும் மஹாராஷ்டிரா மாநில சட்டசபைத் தேர்தல்களில், பா.ஜ., வெற்றி பெற்று, தன் ஸ்திரத் தன்மையை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும்.இல்லையென்றால் அடுத்தடுத்து வரும் தேர்தல்களில், 'இண்டியா' கூட்டணி வலுப்பெற்று வெற்றி பெறும். மிகவும் டாம்பீகமான, மிதப்பிலான நினைப்பிலிருந்து கீழிறங்கி, யதார்த்த உலகை உற்று நோக்கத் தவறியதால் தான், காங்கிரஸ் முன்பு, நாட்டை ஆளும் வாய்ப்பை இழந்தது; அதே தவறை பா.ஜ., செய்வது நல்லதல்ல.

வாழ்க பி.எஸ்.என்.எல்.,

அ.அப்பர் சுந்தரம், மயிலாடுதுறையில் இருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: நம் நாட்டின் தொலைத்தொடர்பு துறையில், மிகவும் பழமையான, பி.எஸ்.என்.எல்., நிறுவனம், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, ஒரே ஒரு ரூபாய் கட்டணத்தில் தொடர்பு கொள்ளக்கூடிய சூழலை ஏற்படுத்தி, முதன் முதலில் புரட்சி செய்தது. விஞ்ஞான வளர்ச்சி யுகத்தில், தனியார் துறைகளின் ஆதிக்கத்தால், சற்றே பின்னடைவை சந்தித்து இருந்தபோதிலும், கொஞ்சமும் மனம் தளராமல், தரம் நிரந்தரம் எனும் தாரக மந்திரத்துடன் செயல்பட்டு, தற்போது சுக்கிரதசையை நோக்கித் திரும்பியுள்ளது.காரணம், தொலைத் தொடர்பு துறையில் தனியார் நிறுவனங்களின் திடீர் கட்டண உயர்வு தான்.தனியார் நிறுவனங்கள் இத்துறையில் கால் பதித்தபோது, மிகச் சாதாரண மக்களும் மொபைல்போன்களைப் பயன்படுத்தும் வகையில், மிகக் குறைந்த கட்டணத்தை வசூலித்தன. ஆண்டுகள் உருண்டோடி, அவற்றுக்குள் போட்டி ஏற்பட்டபோது, நிலைமையைத் தாக்கு பிடிக்க முடியாமல், மெள்ள மெள்ள கட்டணத்தை உயர்த்தத் துவங்கின.இப்போது முட்டி மோதிக் கொண்டு கட்டணத்தை உயர்த்தி விட்டன. இதனால், நொடித்துப் போயிருந்த பி.எஸ்.என்.எல்., பக்கம், மக்கள்திரும்பத் துவங்கி விட்டனர்.எப்பொழுதும் சீரான கட்டணத்தையே வைத்துள்ள பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திற்கு, 29.75 லட்சம் வாடிக்கையாளர்கள், ஒரே வாரத்தில் மாறி உள்ளனர்.தற்போதைய நிலையில், 4ஜி அலைக்கற்றையைத் தான் இந்நிறுவனம் கொடுக்கிறது. தற்போதைய நிலையிலேயே வளர்ச்சி கண்டால், வெகு சீக்கிரத்தில் 5ஜி அலைக்கற்றைக்கும் மாறும் சூழல் ஏற்படலாம். இதனால், பி.எஸ்.என்.எல்., இணைப்பின் வேகம் துரிதமாகி விடும்.தனியார் பக்கமே திரும்ப வேண்டி இருக்காது. வாழ்க, அரசின் பி.எஸ்.என்.எல்., நிறுவனம்!

ரஞ்சித் ஆவேசத்தின் பின்னணி என்ன?

கே.ரங்கராஜன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:'ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கிடைக்கும் வரை ஓயப்போவதில்லை' என, நீலம் பண்பாட்டு மையம் சார்பில் பேரணி நடத்தி, அதில் பேசிய சினிமா இயக்குனர் ரஞ்சித் சூளுரைத்து உள்ளார்.மேலும், 'இந்த கொலையில் உண்மைத் தன்மை வெளிவர வேண்டும். தலித் மக்களின் குரலை ஓங்கி ஒலிக்க விடாமல் செய்கின்றனர். எங்களுடைய உரிமைகளை கேட்டால் எங்களை, 'பி டீம்' என்கின்றனர்.'நாங்கள் அம்பேத்கரின்பிள்ளைகள்; யார் பின்னாலும் நிற்க வேண்டிய அவசியமும் இல்லை. நாங்கள் யாரைக் கண்டும் பயப்பட மாட்டோம். திருமாவளவனுக்கு எதிராக ஒரு நாளும் இருக்க மாட்டோம். தலித் ஆகிய நாம் யாருக்கு எந்த பிரச்னை வந்தாலும் எல்லாரும் ஒன்று சேர வேண்டும்' எனவும் பேசியுள்ளார்.அவரது ஆதங்கம் நியாயமானதே. ஆயினும், வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த பிரச்னையின்போது, திருமாவளவன், ரஞ்சித்திடம் இந்த ஆவேசத்தை பார்க்க முடியவில்லையே.அமைச்சர் பொன்முடி விழா மேடையில் கவுன்சிலரை பார்த்து, 'ஏம்மா நீ எஸ்.சி., தானே' என்று கேட்டபோது, திருமாவும், ரஞ்சித்தும் எங்கே போயிருந்தனர்.டி.ஆர்.பாலுவும், தயாநிதி மாறனும், 'நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா' என பொங்கிய போது, திருமாவும், ரஞ்சித்தும் அதை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்தது ஏன்?ஆடம்பரமான சோபாவில் அமைச்சர்ராஜ கண்ணப்பன் அமர்ந்தபடி, திருமாவை சாதாரண பிளாஸ்டிக் சேரில் அமர வைத்து பேசியதை கண்டபோது, ரஞ்சித்துக்கு ரத்தம் கொதிக்கவில்லையா?மணல் கொள்ளையை தடுக்கப் போன தலித் வி.ஏ.ஓ., கொலை செய்யப்பட்டபோது திருமாவும், ரஞ்சித்தும் எங்கே போயிருந்தனர். நெல்லையில், ஜாதி வெறியில் பள்ளி மாணவன்வெட்டப்பட்ட போது, திருமாவும், ரஞ்சித்தும் என்ன செய்து கொண்டிருந்தனர்.எனவே, ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு முன்பே, மேற்கண்ட பிரச்னைகளில் ரஞ்சித் குரல் எழுப்பியிருந்தால், அவரது சமூக நலனையும், தலித்கள் மீதான பாசத்தையும் பாராட்டலாம். ஆனால், தற்போது மட்டும் குமுறுவது ஒரு சார்பு அரசியலாகவும், தன் தங்கலான் படத்துக்கான விளம்பரத்துக்காகவும் செய்வது போலவே தோன்றுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

D.Ambujavalli
ஜூலை 25, 2024 17:06

திரைத்துறையினர் தங்கள் படம் வெளிவரும்போதுதான் பொதுப் பிரசனைப் பக்கம் திரும்புவார்கள் இது எல்லாரும், கமல் முதல் , 'சிஸ்டம் சரியில்லை என்று அன்று கூவிவிட்டு அதை சரி செய்ய அரசியலுக்கு வந்து ரட்சிப்பாராக்கும் என்று பார்த்தால் பம்மி விட்டார்


Sridhar
ஜூலை 25, 2024 12:24

கடந்த தேர்தலில் பிஜேபிக்கு ஏற்பட்ட சரிவுக்கான காரணங்களை அவ்வளவு எளிதாக புரிந்துகொள்ளமுடியாது. எதிர்க்கட்சிகளின் பெண்களுக்கு 1 லச்சம் போன்ற போலி வாக்குறுதிகள் UP யில் நிறைய இடங்களில் தாக்கத்தை ஏற்படுத்திய மாதிரி, மஹாராஷ்டிராவில் கூட்டணி குழப்பங்கள் வங்காளத்தில் மாமடாவின் அராஜகம் போன்றவை பின்னடைவை ஏற்படுத்தியிருந்தாலும், பல இடங்களில் புதிதாக கால் பதிக்கவும் முடிந்திருக்கிறது. அடுத்தடுத்த தேர்தல்களில் இந்த சலசலப்பை சரி செய்யும் அமைப்பு பலம் பிஜேபியிடம் நிறையவே உள்ளது. மேலும், நடைபெற்ற இடை தேர்தல்களில், பெரும்பான்மையான தொகுதிகள் வெற்றிபெற்ற கட்சிகள் ஏற்கனவே ஜெயித்த தொகுதிகள். தக்கவைத்துக்கொண்டிருக்கிறார்கள், அவ்வளவே. இந்தி கூட்டணி என்று பரவலாக வெற்றியை சொன்னாலும், நிறைய தொகுதிகளில் ஒன்றை ஒன்று எதிர்த்தும் போட்டி போட்டுருக்கிறார்கள். வங்காளத்தில், திரினாமுலை எதிர்த்து காங் டெபாசிட் இழந்திருக்கிறது தமிழகத்தில் திமுக வெற்றி எப்படி என்பது எல்லோருக்கும் தெரியும் ஆகவே பிஜேபி ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கவேண்டிய நேரம்தானே தவிர, கவலைப்படும் நிலைமை இல்லை.


Sampath Kumar
ஜூலை 25, 2024 11:35

பிஜேபி ஆட்சியில் மிக்க பெரிய ஊழல் குற்ற சட்டு இல்லையாம் அசோக் சொல்லுகிறார் ஊழல்கள் நன்றாக மறுக்கப்பட்டு மறுக்கப்பட்டு அப்புறம் துடைக்க பட்டு நகர்த்தப்பட்டு விட்டது அம்புட்டு தான் விஷயம் ஆக பிஜேபிக்கு இது நல்லது அல்ல என்று சொன்னால் மக்கள் ஏற்பார்கள் இல்லாவிட்டால் ஒதுக்கி வைக்கப்படுவார்கள்


KRISHNAN R
ஜூலை 25, 2024 11:07

உண்மை தான். பட்ஜெட் நிதி தமிழ் நாடு ஓர வஞ்சனை செய்யப்பட்டுள்ளது


VENKATASUBRAMANIAN
ஜூலை 25, 2024 08:36

பாஜக சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரமிது. மக்களை சந்தித்து திட்டங்கள் பற்றி விளக்கவேண்டும். எப்படி ஸ்டிக்கர் ஒட்டுகிறார்கள் என்றும் கூறவேண்டும். அதை விட்டு அறிக்கை விடுவதால் ஓட்டு வராது.


VENKATASUBRAMANIAN
ஜூலை 25, 2024 08:33

ரஞ்சித் திருமா போன்றவர்களுக்கு செலக்டிவ் அம்னீக்ஷியா. சுயலாபத்திற்காக பேசுவார்கள்


C.anandakumar
ஜூலை 25, 2024 05:59

கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன நிலையில் இருக்கிறது பிஜேபியின் இன்றைய நிலை


முக்கிய வீடியோ