உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / ஆப்பசைத்த குரங்கான ராகுல்!

ஆப்பசைத்த குரங்கான ராகுல்!

சி.ராதாசந்த், ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: போலி வாக்காளர்களால் தான், பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது என்றும், அதற்கு தேர்தல் ஆணையம் முழு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது என்றும் வாய் கூசாமல் கூறியுள்ளார், காங்., - எம்.பி., ராகுல். அவருடைய குற்றச்சாட்டு என்னவென்றால், ஒரே பெயரில், ஒரே முகவரியில் நுாற்றுக்கணக்கான வாக்காளர்கள் போலியாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்பதும், அவர்கள் அனைவரும் பா.ஜ.,விற்கு ஓட்டளித்து, காங்கிரசை தோற்கடித்துள்ளனர் என்பதும் தான்! ஆனால், தேர்தல் ஆணையத்திற்கு என்று தனியாக ஊழியர்கள் எவரும் இல்லை. தேர்தல் ஆணையத்திற்கு, ஐ.ஏ.எஸ்., மட்டத்தில் உயர் அதிகாரிகளும், அவர்களுக்கு உதவியாக சில அதிகாரிகளும் மட்டுமே மாநில அளவில் பணிபுரிவர். மற்றபடி வாக்காளர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம், பிழைத்திருத்தம் போன்ற அனைத்து பணிகளையும் செய்வது, அந்தந்த மாநில உள்ளாட்சி மன்றங்களின் சார்பில், அந்தந்த மாநில அரசு ஊழியர்களான ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உள்ளாட்சி அதிகாரிகள் தானே தவிர, தேர்தல் ஆணையத்தின் நேரடி ஊழியர்கள் அல்ல! அவ்வாறு சேர்ப்பு, நீக்கம் போன்ற பணிகளை இவர்கள் செய்தாலும், தேர்தலுக்கு முன் வாக்காளர் பட்டியல்கள் எல்லா கட்சிகளுக்கும் உள்ளாட்சி மன்றங்களால், 'பிரின்ட்' எடுத்து வழங்கப்படுகின்றனவே... அதை வைத்து தானே கட்சியினர் வாக்காளர்களின் இல்லம் தேடி சென்று, 'சிறப்பு கவனிப்பு' செய்து, ஓட்டுகளை அறுவடை செய்து வருகின்றனர். சென்னை போன்ற மாநகரங்களில் வேண்டுமானால், எவர் எந்த முகவரியில் வசிக்கின்றனர், ஒரே வீட்டில் தான் வசிக்கின்றனரா என்பதை கண்டறிவது கடினமாக இருக்கலாம். ஆனால், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி போன்ற வாக்காளர் பட்டியல்களில், ராகுல் சொல்வதை போல் கொத்து கொத்தாக பெயர்கள் சேர்க்கப்பட்டிருந்தால், அவை உள்ளங்கை நெல்லிக்கனியாய் தெரிந்து விடுமே! ஏனெனில், அவ்வூர்களில் உள்ள முக்கிய கட்சிகளின் பூத் ஏஜன்டுகளை மீறி, வாக்காளர் பட்டியலில் ஒரு புள்ளியைக் கூட வைக்க முடியாது. மேலும், அவர்கள் அனைவரும் தேர்தல் முடியும் நேரத்தில், மீதமுள்ள ஓட்டுகளை சரிசமமாக பிரித்து, தொழில் தர்மத்தின் அடிப்படையில் கள்ள ஓட்டுகளை பதிவு செய்வர். அதில் எவரும் விதிவிலக்கல்ல. உண்மை நிலை இப்படி இருக்கும்போது, ஒரே முகவரியில் பதிவு செய்யப் பட்ட அனைவரும், பா.ஜ.,விற்கு தான் ஓட்டளித்தனர் என்பதை, இவர் எப்படி கண்டறிந்தார் என்பது தெரியவில்லை. கோடிக்கணக்கான வாக்காளர்களை கொண்ட நம் நாட்டில், பிழைகளே இல்லாமல் எந்த ஓர் அரசும் ஆவணங்களை தயாரிக்க முடியாது. அதுவும், சில சதவீதங்களாக தான் இருக்குமே தவிர, இவர் கூறுவதை போன்று கொத்து கொத்தாக இருக்காது. அவ்வாறான தவறுகளை திருத்தம் செய்வதற்கான வழிகளை தான், பொறுப்புள்ள எதிர்க்கட்சி தலைவராக ராகுல் தெரிவித்திருக்க வேண்டுமே தவிர, ஒரு ஜனநாயக அமைப்பின் மீது இவ்வாறு சேற்றை வாரி இறைத்திருப்பது அவரது பதவிக்கு அழகல்ல. தற்போது, தேர்தல் ஆணையம் ராகுலிடம், பிரமாண வாக்குமூலம் கேட்டவுடன், 'ஆப்பசைத்த குரங்காய்' ஜகா வாங்குவதை பார்த்தால், 'அவசரப்பட்டுட்டியே குமாரு' என்ற சினிமா டயலாக் தான் நினைவுக்கு வருகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்... இந்த பூமராங் இவரை எப்படி தாக்கப் போகிறது என்று!  காற்றில் கம்பு சுற்றும் பழனிசாமி! என்.மல்லிகை மன்னன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் ஏழைகளே இருக்க மாட்டார்கள்' என்று அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி தேர்தல் பரப்புரையில் கூறியுள்ளார். இதைவிட, சிறப்பான காமெடி எதுவும் இருக்க முடியுமா? கடந்த நான்கரை ஆண்டுகளுக்கு முன், அ.தி.மு.க., ஆட்சி தானே நடந்தது? அப்போது நாட்டில் பாலாறும், தேனாறும் ஓடியதா அல்லது ஏழைகள் எல்லாம் அம்பானி ஆகிவிட்டனரா? ஓட்டுக்காக எந்த அளவு தான் மக்களை ஏமாற்றுவது என்ற வரைமுறை இல்லையா? தி.மு.க., கூட்டணியில் இருந்து இதுவரை எந்தக் கட்சியும் விலகவில்லை. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணியில், பா.ம.க.,விலோ தந்தைக்கும், மகனுக்கும் பதவி சண்டை... அவர்கள் பஞ்சாயத்து முடிவதற்குள் தேர்தலே முடிந்து விடும். மற்றொருபுறம் தே.மு.தி.க., தலைவி பிரேமலதாவோ, ராஜ்யசபா எம்.பி., சீட் கிடைக்காத கோபத்தில் புழுங்கிக் கொண்டிருக்கிறார். இதில், புதிதாக கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய், வரும் சட்டசபை தேர்தலில் கணிசமான ஓட்டுகளை பெறுவார் என்றே கூறுகின்றனர். கள நிலவரம் இப்படி இருக்கையில், ஜெயலலிதா மறைவுக்கு பின், தொடர் தோல்வியையே சந்தித்து வரும் பழனிசாமி, ஓட்டு அறுவடைக்காக, வாய்க்கு வந்ததை எல்லாம் வாக்குறுதிகளாக கொடுத்து வருகிறார். இப்படித்தான் சமீபத்தில் தேர்தல் பரப்புரையின் போது, தாங்கள் ஆட்சிக்கு வந்தால், கோவில் நிலத்தில் குடியிருப்போருக்கு அந்நிலத்தை சொந்தமாக்குவதாக வாக்குறுதி கொடுத்தார். இப்போது, ஏழைகளே இருக்க மாட்டார்கள் என்கிறார். எவர் ஆட்சிக்கு வந்தாலும் ஏழைகள் பணக்காரர்களாக முடியாது; அரசியல்வாதிகள் மட்டுமே மக்களின் வரிப் பணத்தையும், திட்டங்கள் என்ற பெயரில் மத்திய அரசு கொடுக்கும் பல ஆயிரம் கோடிகளையும் கொள்ளை அடித்து பணக்காரர்கள் ஆக முடியும். எனவே, பழனிசாமி காற்றில் கம்பு சுற்ற வேண்டாம்!  பகை சூழ்ந்த நிலையிலும் புன்னகை மலர வைத்தவர்! சொ.முத்துசாமி, பாளையங் கோட்டையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'உதயமானது புதிய இந்தியா' எனும் தலைப்பில், 'தினமலர்' நாளிதழில் வெளி வந்திருந்த கட்டுரை யில், பார்லிமென்டில் மோடி தந்த பதிலுரையை, ஒரு வரி விடாமல் வெளியிட்டு இருந்தது சிறப்பு! உலகம் முழுதும் ஏதாவது ஓரிடத்தில் போர் நிகழ்ந்து கொண்டி ருக்கிறது. அந்நாடுகளை சேர்ந்த மக்களும் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். ஆனால், நம் நாட்டை சுற்றிலும் பகைவர்கள் மட்டுமே சூழ்ந்திருக்கும் நிலையிலும், நம் மக்கள் நிம்மதியாக, சந்தோஷ மாக இருக்கின்றனர் என்றால், அதற்கு காரணம், மோடி மாதிரியான தலைவர்கள் கையில் நாடு இருப்பதால்! மக்களின் இந்த நம்பிக்கையை மீண்டும் உறுதி செய்வது போல் இருந்தது மோடியின் உரை! இந்த முழு உரையையும் அப்படியே புத்தகமாக வெளியிட வேண்டும். அப்போது தான், வருங்காலத்தில், நாடு எத்தகைய சூழ்நிலைகளை எதிர்கொண்டது, கடந்து வந்துள்ளது என்பதை அடுத்த தலைமுறையினரும் அறிந்து கொள்ள முடியும்! மோடியின் முழு உரையையும் வெளியிட்ட 'தினமலர்' நாளிதழுக்கு நன்றி! 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
ஆக 15, 2025 17:06

ஜெயலலிதா ஆண்ட 10 ஆண்டுகளில் மட்டும் ஏழைகளே இல்லையா, என்றும் ஓட்டுப்போட்டு ஏமாளிகள் ஏழைகள், வேண்டுமானால் அவர்களை பரம ஏழைகளாக்குவார்கள் இவர்கள் ஆயிரம் கோடிகளை லட்சம் கோடிகளாக மாற்றிக்கொள்வார்கள் இதுதான் இந்த 60 ஆண்டுகளின் அரசியல் நியதி


புதிய வீடியோ