தி.மு.க., மரியாதை தரலையே!
ம.தி.மு.க., முதன்மை செயலரும், திருச்சி எம்.பி.,யுமான துரை வைகோ, திருச்சியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், 'மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.,யாக இருக்கும்போது அனைவரும் என்னுடைய மக்கள் தான்; இதில், அரசியல் பார்ப்பதில்லை. டில்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்திக்கும் போது, மக்கள் பிரச்னை பற்றிதான் பேசுவேன்.'மக்கள் பிரச்னைகளை பொறுத்த வரை, அரசியல் எல்லைகளை கடந்து தான் செயல்படுவேன். வைகோ மீது தமிழகம் மட்டுமின்றி, நாடு முழுதும் அரசியல் எல்லைகளை கடந்து மரியாதை வைத்துள்ளனர். அவர் சார்பாக, மத்திய அரசிடம் நான் கோரிக்கை வைக்கும்போது, அதற்கு ஒரு மரியாதை கிடைக்கிறது...' என்றார்.மூத்த நிருபர் ஒருவர், 'அது சரி... ஆனா, வைகோவுக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி கேட்டு வச்ச கோரிக்கைக்கு, தி.மு.க., மரியாதை தரலையே...' என முணுமுணுக்க, சக நிருபர்கள் சத்தமின்றி சிரித்தனர்.