பைசா செலவின்றி பதிலடி!
தமிழக முன்னாள் முதல்வர் பக்தவத்சலத்தின், 38ம் ஆண்டு நினைவு தினம், சென்னை சத்தியமூர்த்தி பவனில் அனுசரிக்கப்பட்டது. அவரது படத்திற்கு, தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை மலர் துாவி மரியாதை செலுத்தினார்.பின், நிருபர்களிடம் அவர் கூறுகையில், 'சென்னை, திருவான்மியூர் பொதுக் கூட்டத்தில் பேசிய பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்திற்கு தேவையான நிதியை, மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. ஆனால், தமிழக அரசு பொய் பிரசாரம் செய்வதாக கூறியிருக்கிறார்; அது முழுக்க முழுக்க பொய்' என்றார்.இதைக் கேட்ட நிருபர் ஒருவர், 'அண்ணாமலை புள்ளி விபரங்களை புட்டு புட்டு வச்சு தமிழக அரசுக்கு பதிலடி தந்தாரு... இவரும் ஒரு பொதுக் கூட்டம் போட்டு, அதுக்கு பதிலடி தரலாமே...' என்றார்.மற்றொரு நிருபர், 'பொதுக்கூட்டம் நடத்த லட்சக்கணக்குல செலவாகும்... எதுக்கு வெட்டி செலவுன்னு தான், பிரஸ் மீட்லயே பைசா செலவில்லாம பதிலடி தந்துட்டாரு...' எனக் கூற, சக நிருபர்கள் சிரித்தபடியே கலைந்தனர்.