தலையாட்டியே சமாளிச்சிட்டாங்க!
சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம், தி.மு.க.,வைச் சேர்ந்த மண்டல குழு தலைவர் தனியரசு தலைமையில் சமீபத்தில் நடந்தது. மண்டல உதவி கமிஷனர் பத்மநாபன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, 14வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் பானுமதி, 'குடிநீர் பெரும் பிரச்னையாக உள்ளது; அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுப்பதில்லை' என, புகார் கூறினார். இது குறித்து, குடிநீர் வாரிய அதிகாரி சுப்பிரமணியனிடம், மண்டல குழு தலைவர் தனியரசு விளக்கம் கேட்டார். அவரோ, செய்து தருவதாக தலையாட்டினார். 'மாதந்தோறும் வெறுமனே தலையாட்டுகிறீர்கள்... ஆனால், வேலை தான் நடப்பதில்லை' என, மண்டல குழு தலைவர் கண்டித்தார். இதை பார்த்த நிருபர் ஒருவர், 'இந்த மண்டலத்துல இருக்கிற குடிநீர் மற்றும் மின் வாரியம் ஆகிய இரு துறையினரும் தலையாட்டியே காலத்தை கடத்திட்டாங்க பா...' என, கிண்டல் அடிக்க, சக நிருபர்கள் ஆமோதித்தனர்.