பேச்சு, பேட்டி, அறிக்கை
திரைப்பட நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆன்டனி பேச்சு: முதல்வர் ஸ்டாலின் மீது எனக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும் உள்ளது. இதுவரை நான் அவரை நேரில் பார்த்ததில்லை. ஆனால், அவர் எந்த இடத்திலும் கடும் கோபத்துடனோ அல்லது முகம் சுளிக்கும் விதமாகவோ பேசி நான் பார்த்ததில்லை. அவர் மிகவும் பண்பாகவும், அன்பாகவும் நடந்து கொள்பவர்; சிறந்த மனிதநேயமிக்கவர். அவரது பிறந்த நாள் விழாவுக்கு என்னை அழைத்தது பெரும் மகிழ்ச்சி. தேர்தல் வருதுல்ல... தமிழ் திரையுலகினருக்கு இனி ஆளுங்கட்சியினரிடம் இருந்து அடிக்கடி அழைப்புகள் வரும் அகில இந்திய காங்., உறுப்பினர் பட்டுக்கோட்டை ராஜேந்திரன் பேட்டி: தேசிய அளவில் இந்திரா, ராஜிவ், சோனியா, மாநில அளவில் காமராஜர், மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி போன்ற தலைவர்களுடன் அரசியல் பணிகளில் ஈடுபட்டேன் என்பதை பெருமையாக கருத முடிகிறது. கடந்த 50 ஆண்டு அரசியல் பயணத்தில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், கட்சிக்காக உழைத்ததற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற வருத்தமும் இருக்கிறது. ஆனாலும் வரும் சட்டசபை தேர்தல், ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழக்கவில்லை.என்ன தான் கட்சிக்கு மாங்கு மாங்குன்னு உழைத்தாலும், சோனியா குடும்பத்தின் ஆசி இருந்தால் தான், எந்த பதவியும் கிடைக்கும்! தமிழக பா.ஜ., பொதுச் செயலர் ஏ.பி.முருகானந்தம் அறிக்கை: 'பதவிக்காக எதையும் செய்ய பன்னீர்செல்வம் துணிந்து விடுவார்' என, அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் விமர்சித்தார். 'தி.மு.க.,வுக்கு ஆதரவாக பன்னீர்செல்வம் செயல் படுகிறார்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி குற்றஞ்சாட்டினார். இது எல்லாம் நுாற்றுக்கு நுாறு உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில், தி.மு.க.,வில் பன்னீர்செல்வம் இணைந்துள்ளார். அவரை விமர்சிப்பதற்குரிய தகுதியை இழந்து விட்டார் என்பதால், நான் விமர்சிக்க விரும்பவில்லை; எங்கிருந்தாலும் வாழ்க. பன்னீர்செல்வம் குறித்து, மத்தவங்க விமர்சனங்களை மேற்கோள் காட்டியதை விட, இவரே நறுக்குன்னு நாலு வார்த்தை திட்டிட்டு போயிருக்கலாம்! தமிழக காங்., துணை தலைவர் இதயத்துல்லா பேட்டி: காங்கிரஸ் கட்சிக்கு ஒரு ராஜ்யசபா இடம் வழங்குவதாக தி.மு.க., கூறியுள்ளது. ஆகவே, தகுதியான மூத்த தலைவருக்கு கொடுக்கப்பட வேண்டும். 2019, 2024 லோக்சபா தேர்தல்களில், சிறுபான்மை முஸ்லிம்களுக்கு 'சீட்'கள் ஒதுக்கப்படவில்லை ஆகவே, தற்போது முஸ்லிம் ஒருவருக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்கினால் நன்றாக இருக்கும். 'எனக்கு ராஜ்யசபா எம்.பி., தரணும்'னு நேரடியா கேட்டுட வேண்டியது தானே... ஏன் சுத்தி வளைக்கணும்?