உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் /  பாரம்பரிய அரிசியில் மதிப்பு கூட்டல்!

 பாரம்பரிய அரிசியில் மதிப்பு கூட்டல்!

பாரம்பரிய அரிசி மற்றும் சிறுதானியங்களில் மதிப்புக்கூட்டல் செய்து, வெற்றிகரமான சிறு தொழில் முனைவோரான, கர்நாடக மாநிலம், பெங்களூரில் வசிக்கும், 58 வயதான சாந்தி நந்தகுமார்: சேலம் மாவட்டம், சங்ககிரி தான் என் சொந்த ஊர். கணவருக்கு பணி மாற்றலாகி, பெங்களூரு வந்து விட்டோம். பெங்களூரு வேளாண் அறிவியல் பல்கலைக் கழகத்தின் பள்ளியில் ஆசிரியை வேலை கிடைத்தது. அங்கு வேலை பார்த்தபடியே, எம்.பில்., படிப்பை முடித்தேன். பணி அழுத்தம் அதிகமானதால், வேலையை விட்டு விட்டேன். ஓராண்டுக்கு பின், உணவு பொருட்கள் மதிப்பு கூட்டல் தொடர்பான சில பயிற்சிகளை முடித்தேன். மூன்று ஆண்டுகளுக்கு முன், பாரம்பரிய அரிசி வகைகளை, விவசாயிகளிடம் இருந்து வாங்கி விற்பனை செய்யலாம் என்று முடிவு செய்தேன். தமிழகத்தில், பாரம்பரிய அரிசிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும், கர்நாடகாவில் பெரிதாக விற்பனை ஆகவில்லை. இதனால், பாரம்பரிய அரிசி, தானியங்கள், மூலிகைகளை பயன்படுத்தி, புது வகை உணவுகளை செய்து பார்த்தேன். அவற்றை எனக்கு தெரிந்தவர்கள், நண்பர்களுக்கு கொடுத்து, சாப்பிட்டு பார்க்கச் சொன்னேன். அவர்கள் நன்றாக இருப்பதாக கூறவே, அதையே தொழிலாக செய்யலாம் என்று முடிவெடுத்தேன். அப்படி ஆரம்பித்தது தான், 'குஹாயா' நிறுவனம். வேலைக்கு செல்வோருக்கும், குழந்தைகளுக்கும் பதப்படுத்தாத, ஆரோக்கியமான உணவுகளை தயாரித்து கொடுக்கலாம் என்று முடிவு செய்து, நேரடியாக விவசாயிகளிடம் இருந்து மூலப்பொருட்களை கொள்முதல் செய்தேன். தற்போது, ஐந்து வகை இட்லி மாவு, ஒன்பது வகை தோசை மாவு, தொக்குகள், வாழைப்பழ சத்து மாவு, அத்திப்பழம் மற்றும் செவ்வாழையில் செய்யப்பட்ட மதிப்பு கூட்டல் தயாரிப்புகள், முருங்கைக்காய் சூப், முருங்கைப்பொடி என, 60க்கும் மேற்பட்ட பொருட்களை தயாரித்து, விற்பனை செய்கிறேன். ஆரம்பத்தில், 'வாட்ஸாப்'பில் மட்டும், 'ஆர்டர்' எடுத்தேன். நாளடைவில் வாடிக்கையாளர்கள் அதிகரிக்கவே, சமூக வலைதளங்கள் வாயிலாகவும் என் தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறேன். வங்கியில் கடன் வாங்கி, இயந்திரங்கள் வாங்கினேன். அதுதான் என் தொழிலுக்கான முதலீடு. இந்தியா மட்டுமல்லாமல், அமெரிக்கா, லண்டன், ஸ்வீடன், போலந்து, ஜெர்மனி, இலங்கை, அபுதாபி நாடுகளுக்கும் என் தயாரிப்புகள் செல்கின்றன. மாதம், 2 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கிறது. எந்த நேரத்திலும், பெண்கள் எவரையும் சார்ந்து இருக்கக் கூடாது. உங்கள் திறமைகளை வீட்டுக்குள்ளேயே வீணடிக்காதீர்கள். கடினமாக உழைத்தால், எந்த உயரத்தையும் எட்டலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை