சுக்கு - மல்லி காபி கடையை நடத்துகிறேன்!
கடந்த 70 ஆண்டுகளாக, மதுரையில் சுக்கு - மல்லி காபிக்காக மட்டுமே கடையை நடத்தி வருவது பற்றி கூறுகிறார் ஜான்ஸ்:அப்பா வைத்தியராக இருந்தார். 1954ல் இந்த கடையை ஆரம்பித்த அவரை தொடர்ந்து, நான் நடத்தி வருகிறேன். எனக்கு மூன்று மகன்கள். நான் எங்க அப்பா கூட கடைக்கு வர ஆரம்பித்த போது, ஒரு காபி விலை, 10 பைசா; தற்போது, 20 ரூபாய்க்கு விற்கிறேன்.அப்பா சொல்லிக் கொடுத்த அதே முறையை பின்பற்றி தான், தற்போது வரை, சுக்கு - மல்லி காபி போடுகிறோம். நயம் கருப்பட்டி, சுக்கு, மல்லி, மிளகு இதை சரியான விகிதத்தில் வென்னீரில் போட்டு பதமாக காய்ச்சிக் கொடுக்கிறோம்.சுக்கு - மல்லி காபி உடம்புக்கு மிகவும் நல்லது; செரிமானத்துக்கு உதவும்; வயிறு உபாதைகளை சரிசெய்யும்; மழைக் காலங்களில் சளி, இருமலை கட்டுப்படுத்தும்.பெரும்பாலும் மாலை நேரங்களில் தான் மக்கள் அதிகம் வருகின்றனர். ஆனால், 'சுக்கு - மல்லி காபி குடிப்பதற்கு சரியான நேரம் மதிய நேரம் தான்' என்று, வைத்தியரான என் அப்பா கூறுவார்.'காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, இரவில் கடுக்காய்'ன்னு சொல்லி வைத்துள்ளனர். மதிய நேரம், சாப்பிடுவதற்கு ஒரு அரை மணி நேரம் முன்னாடி, சுக்கு - மல்லி காபியை குடித்தால், செரிமானம் நல்லா நடக்கும்.ஒரு நாளைக்கு, 500 பேர் வரை எங்கள் கடைக்கு வருகின்றனர். மழைக்காலம், குளிர்காலம் எனில் கூட்டம் அதிகமாக இருக்கும். காலையில் 9:00 மணிக்கு கடையை திறப்போம். இரவு 10:00 மணி வரை, சுடச்சுட சுக்கு - மல்லி காபி கிடைத்தபடியே இருக்கும். இன்றைய இளம் தலைமுறையும் எங்கள் கடையில் வந்து, சுக்கு - மல்லி காபி குடிப்பது, எங்களுக்கே ஆச்சரியம் தான்.சிகரெட்டுக்கு எங்கள் கடையில் அனுமதி இல்லை. வேர்க்கடலை உருண்டை, கம்பு, கேப்பை உருண்டை போன்றவையும் கிடைக்கும். நாங்கள் விற்கும் கைச்சுற்றல் முறுக்கும், சுக்கு - மல்லி காபியும் சேர்த்து சாப்பிடுவதற்கென வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். பனங்கற்கண்டு சேர்த்த எங்களுடைய, ஜான்ஸ் சுக்கு - மல்லி கலவையும் விற்கிறோம். அதற்கும் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு.நல்லதை கொடுத்தால், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மக்கள் நம்மை கைவிட மாட்டார்கள் என்பதை தான், 70 ஆண்டுகளாக இந்த தொழில் எங்களுக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கும் மந்திரம்!