புகார் பெட்டி புதர் சூழ்ந்துள்ள மின் மாற்றி சீரமைக்க வேண்டுகோள்
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், பாலுார் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இங்குள்ள குடியிருப்புகளுக்கு மின் வாரியம் சார்பில், பாலுார் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படுகிறது.பாலுார் துணை மின் நிலையத்தில் இருந்து தேவனுார், ரெட்டிபாளையம் உள்ள பகுதிகளுக்கும் மின் வினியோகம் செய்யப்படுகிறது. காஞ்சிபுரம் -- செங்கல்பட்டு சாலையில் பாலுார் பகுதியில், மின்வாரியம் சார்பில் மின்மாற்றிகள் வைக்கப்பட்டு உள்ளன.இந்த மின்மாற்றிகள் உள்ள கம்பங்கள் சிமென்ட் பூச்சு உதிர்ந்து காணப்படுகின்றன.மேலும், மின் மாற்றியை சுற்றி பெரிய பெரிய கருவேல மரங்கள் வளர்ந்து, புதர் மண்டி காணப்படுகிறது.அதே போல, இந்த பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் மின் தடங்கள் செல்லும் பல இடங்களில், சீமை கருவேல மரங்கள், செடி, கொடிகள் வளர்ந்து, மின் கம்பிகளில் உரசுகின்றன. இதன் காரணமாக மழைக் காலங்களில் சிறு காற்றடிக்கும் போது கூட மின் தடை ஏற்படுவதாக, அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே, இந்த பகுதியில் மின் இணைப்புக்கு இடையூறாக உள்ள மரங்களின் கிளைகள் மற்றும் செடிகளை வெட்டி அகற்ற வேண்டும்.