''காங்கிரஸ் மேல கடுப்புல இருக்காங்க பா...'' என, ஏலக்காய் டீயை பருகியபடியே பேச்சை ஆரம்பித்தார் அன்வர்பாய்.''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.''காஞ்சிபுரம் மாநகராட் சியில், தி.மு.க.,வைச் சேர்ந்த மகாலட்சுமி மேயரா இருக்காங்க... மொத்தமுள்ள 51 கவுன்சிலர்களில், 33 பேர் தி.மு.க.,வினர் தான் பா...''காங்., சார்புல, குமரகுருநாதன்னு ஒருத்தர் மட்டுமே கவுன்சிலரா ஜெயிச்சாரு...ஆனாலும், கூட்டணி கட்சி என்பதால், இவருக்கு துணை மேயர் பதவி தந்திருக்காங்க பா...''இப்ப, மேயரை மாத்தணும்னு தி.மு.க., - -அ.தி.மு.க., மற்றும் சுயேச்சை கவுன்சிலர்கள்னு 33 பேர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர தயாராகுறாங்க... இந்த கோஷ்டியில், துணை மேயர் குமரகுருநாதனும் இருக்காரு...''இதனால, 'எங்க உள்கட்சி பிரச்னையில இவரும் சேர்ந்துக்கிறது எந்த வகையில நியாயம்'னு மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள், காங்கிரஸ் மாநில தலைமைக்கு புகார் அனுப்பியிருக்காங்க...'' என்றார், அன்வர்பாய்.''வசூல் மழையில நனையுறாங்க ஓய்...'' என்றார், குப்பண்ணா.''யாரு வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.''சேலம் மாவட்டம், இடைப்பாடி போலீஸ் ஸ்டேஷன் பெண் அதிகாரியை தான் சொல்றேன்... இவங்க லிமிட்ல, நிறைய சந்து கடைகள்ல, டாஸ்மாக் சரக்கு விற்பனை பண்றா ஓய்...''இதுல, பெண் அதிகாரிக்கு மாமூல் மழை கொட்டறது... பெரும்பாலும், ஆளுங்கட்சி புள்ளிகள் தான் இதை செய்யறா... இது சம்பந்தமா, பெண் அதிகாரிக்கு யாராவது தகவல் தந்தா, அவாளை பத்தி, சந்து கடைகளுக்கு தகவல் போயிடறது ஓய்...''உடனே, தகவல் சொல்றவாளை ஆளும் கட்சியினர் மிரட்டறா... பெண் அதிகாரி பற்றி மாவட்ட, சரக, மண்டல போலீஸ் அதிகாரிகளுக்கு அந்த ஸ்டேஷன் போலீசாரே பல புகார்களை அனுப்பியிருக்கா ஓய்...''ஆனாலும், ஆளுங்கட்சியினர் செல்வாக்கு அவங்களுக்கு இருக்குதாம்... இதனால, 'என்னை யாரும் அசைக்க முடியாது'ன்னு ஜம்பமா சொல்லிக்கறாங்க ஓய்...'' என்றார், குப்பண்ணா.ஒலித்த மொபைல் போனை எடுத்த அண்ணாச்சி, ''சுமித்ராவா... ஊருல எல்லாரும் சவுக்கியமா தாயி...'' என, தள்ளி சென்று பேச ஆரம்பித்தார்.''வருவாய் துறை அதிகாரிகள் வருத்தத்துல இருக்காங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...''வருவாய் துறை அதிகாரிகளுக்கு 10 கோடி ரூபாய் மதிப்புல, 114 பொலீரோ பி.எஸ்., - 6 ரக ஜீப்கள் வாங்கினாங்க... சப் - கலெக்டர், ஆர்.டி.ஓ., அந்தஸ்துல இருக்கிற, 34 அதிகாரிகளுக்கும், தாசில்தார் அந்தஸ்துல இருக்கிற, 80 அதிகாரிகளுக்கும் இந்த ஜீப்களை குடுத்திருக்காங்க...''வழக்கமா, பொலீரோ பி.எஸ்., - 6 ரக ஜீப்கள்ல, 'ஏசி' வசதி இருக்கும்... சப் - கலெக்டர், ஆர்.டி.ஓ.,வுக்கு ஏசி ஜீப்கள் ஒதுக்குறது தான் வழக்கம்... இப்ப, ஏசி இல்லாத ஜீப்களை இவங்களுக்கு குடுத்திருக்காங்க...''போலீஸ்ல உதவி கமிஷனர் அந்தஸ்துக்கு மேல இருக்கிற அதிகாரிகளுக்கு மட்டும் தான் ஏசி வாகனம் ஒதுக்கணுமாம்... ஆனா, இன்ஸ்பெக்டர் பயன்படுத்துற வாகனங்கள்லயே ஏசி வசதி இருக்காம்... ரோந்து போலீசார் ஜீப்புல கூட ஏசி வசதி இருக்கு... ஆனா, சப் - கலெக்டர், ஆர்.டி.ஓ.,க்களுக்கு ஏசி இல்லாத ஜீப்கள் ஒதுக்கியிருக்கிறதால, அவங்க அதிருப்தியில இருக்காங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.அரட்டை முடிய, அனைவரும் கலைந்தனர்.