உள்ளூர் செய்திகள்

வலையில் ஒரு இதயம்! (8)

முன்கதை: மனநலம் பாதிக்கப்பட்ட மாணவி ஸ்ருதி, மருத்துவர் அருணாவிடம் ஆலோசனை பெற்றுவந்தார். அப்போது, கல்லுாரியில் சேர்ந்த போது நடந்த சம்பவங்களை நினைவு கூர்ந்தார். இனி - கல்லுாரிக்கு வந்த மூன்றாம் நாள் மீண்டும், 'மிஸ்டர் எக்ஸ்' என்ற எண்ணிலிருந்து, ஸ்ருதிக்கு, 'காலை வணக்கம்...' என, குறுஞ்செய்தி வந்தது. கூடவே, 'இன்று சந்திக்கலாமா...' என்று இன்னொரு செய்தியும் வந்தது.அதை பார்த்த கணமே, 'யாராயிருக்கும்' என ஆர்வம் மிகுந்தது.பதில் அனுப்புவதை தவிர்த்தாலும், ஆர்வம் குறுகுறுத்தது. மனதை கட்டுப்படுத்த முடியாமல், அந்த எண்ணுக்கு போன் செய்தாள். அலைபேசி ஒலித்தது; எதிர்முனையில் எவ்வித தகவலும் இல்லை. மீண்டும் வாட்ஸ் ஆப்பில் குறுஞ்செய்தி. 'சந்திக்கலாமா...' யோசித்தபடி, 'சரி...' என்று பதில் அனுப்பினாள்.'மாலை 4:30 மணிக்கு கல்லுாரி புட்கோர்ட்டில் சந்திக்கலாம்...' என்று செய்தி வந்தது. மீண்டும் மாலை 4:20 மணிக்கு ஒரு குறுஞ்செய்தி.'கல்லூரி புட்கோர்ட்டில், காபி ஷாப் மேஜையில் காத்திருக்கிறேன்...'சரியாக, 4:30 மணி ஆகியிருந்தது. குறிப்பிட்டிருந்த மேஜைக்கு செல்லாமல், சற்றுத் தள்ளி நின்று தேடினாள் ஸ்ருதி.மணி 4:40 ஆகியும் வரவில்லை. 'ஒருவேளை சும்மா சொல்லி ஏமாற்றினானோ' என சந்தேகித்தாள்.அவனிடமிருந்து வாட்ஸ் ஆப்பில் மீண்டும் வந்த குறுஞ்செய்தியில், 'உன்னை எதிர்பார்த்து புட்கோர்ட்டில் காத்திருக்கிறேன்... நீ, ஏன் விடுதிக்கு சென்று கொண்டிருக்கிறாய்...' என்றிருந்தது. திரும்பி அந்த மேஜையை பார்த்தாள் ஸ்ருதி; யாருமில்லை.விளையாடுகிறான் என தோன்றியது.'நான் கேன்டீனில் தான் இருக்கிறேன்...' என பதில் அனுப்பினாள் ஸ்ருதி. 'நீ என்ன வண்ணத்தில் ஆடை அணிந்துள்ளாய்...' 'ஏன்...' 'சொல்லு... உன்னை அடையாளம் பார்க்க வேண்டும்...' 'இளம் பச்சை சுடிதார்...' 'பிங்க் இல்லையா...'அவனது குறுஞ்செய்தி கேள்வியால் குழம்பினாள்.'நான் என்று நினைச்சிட்டு, வேறு யாரையாவது பின் தொடர்கிறானோ' சற்று யோசித்து பார்த்தாள்; அப்படித்தான் இருக்கும் என தோன்றியது.'பிங்க் இல்லை...''உன் பெயர் பூர்ணா தானே...'ஸ்ருதிக்கு எல்லாம் புரிந்தது.'பூர்ணா என்று நினைத்து தன்னை பின் தொடர்ந்து கொண்டிருக்கிறான்' பதில் அனுப்பாமல் தவிர்த்தாள். இரண்டு முறை, 'ஹாய்...' அனுப்பினான்.பதில் அனுப்பவில்லை ஸ்ருதி.இப்போது, அலைபேசி அழைத்தது. சில நொடிகள் யோசித்தவள், அழைப்பை எடுத்தாள்.'ஹலோ பூர்ணா...' எதிர்முனையில் ஆண் குரல்.'நான் பூர்ணா இல்ல...' 'அப்போ... நீ, ஸ்ருதி... சரி தானே...''ம்... ஸ்ருதிதான்; உன் பேர் என்ன...''விக்ரம்; உன்னோட சீனியர்...'தொடர்ந்து கேள்வி கேட்டான். 'எங்க இருக்கிற...''கேன்டீனில் தான்...' 'சொன்ன இடத்தில் இல்லயே...''நீயும் தான் இல்ல...''நீ ஏன் இல்ல...''நீ வந்த பின், வரலாம்ன்னு கொஞ்சம் தள்ளி நிக்குறேன்...''உன்னை பார்த்துட்டு வரலாம்ன்னு நானும் சற்று தள்ளி இருக்கிறேன்...' இருவரும் சிரித்தனர்.'ஒரே நேரத்தில அந்த மேஜைக்கு வரலாம் சரியா...' என்றான். 'சரி...' என்றபடி நகர்ந்தாள்.மேஜை இருக்கும் இடத்திற்கு இருவரும் வந்தனர்.அவளை பார்த்து புன்னகைத்தான். 'ஹாய்...' ஸ்ருதியும் கையசைத்து, 'ஹாய்...' கூறினாள்.'பூர்ணாவை நினைத்து எனக்கு போன் செஞ்சிட்டியோ...' என்றாள் ஸ்ருதி.'அவளோட, முகநுாலில் உங்க ரெண்டு பேரோட புகைப்படத்தையும் பார்த்திட்டு, அவ கிட்ட போன் நம்பர் கேட்டேன்; உன் நம்பரை கொடுத்திருக்கிறாள்...' சிரித்தான் விக்ரம். 'சரி... இப்போ என்ன செய்ய போற; அவகிட்டதான் பேசணுமா...' கேட்டாள் ஸ்ருதி.'அவகிட்ட பேச ஆசைப்பட்டேன்; அதனால தான் குறுஞ்செய்தி அனுப்பினேன்; அவள் தான் என்கூட பேசுறான்னு நினைச்சு குழப்பமாயிட்டேன்... அவ போன் நம்பர் இருக்கா...' என்றான் விக்ரம்.பூர்ணாவின் அலைபேசி எண்னை கேட்டதால், எரிச்சல் அடைந்தாள் ஸ்ருதி; விக்ரம் மேல் கோபம் வந்தது. தன்னை அலட்சியப்படுத்துவதாக எண்ணினாள். பூர்ணா மீது பொறாமை எழுந்தது.- தொடரும்...ரவி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !